நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவு – பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 7th, 2024

நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கையின் 27 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுத்துறையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – “.இந்தக் கட்சியை முன்னோக்கி நகர்த்துவதற்கு நாங்கள் அரசாங்கத்தின் அங்கமாகச் செயற்படும் போதெல்லாம், எவ்வித பயமுமின்றியே ஜனாதிபதி அவர்களே உங்களுக்கு உதவி செய்தோம்.

அதேபோன்று எங்களுக்கு அச்சமும் இல்லை, கடனும் இல்லை என்பதை நாங்கள் பெருமிதத்துடன் கூறுகிறோம்.

எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் அந்த நேரத்தில் இந்த நாட்டைக் காப்பாற்றும் திறன் உங்களிடம் உள்ளது என்று முடிவு செய்தோம், நாங்கள் இன்று வரை அந்த ஆதரவை வழங்குகின்றோம்.

எதிர்காலத்திலும் வழங்குவோம். இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்”

இதனிடையே இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவால்களை ஏற்றுக்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைமைத்துவத்துடன் மக்கள் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: