தரம் 1 முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த நடவடிக்கை – அடுத்த வருடம்முதல் நடைமுறைக்கு வரும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, September 8th, 2022

கல்வி மறுசீரமைப்புடன், அடுத்த வருடம் தரம் 1 முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

‘ஆங்கிலம் எளிமையானது’ என்ற தொனிப்பொருளில் அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் உலகத்துடன் அச்சமின்றி பயணிக்க உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

‘கல்வி சீர்திருத்தங்களுடன், மேம்பட்ட தொழில்நுட்ப உலகில் ஆங்கில மொழித்திறன் அவசியமாகும். இந்த நிலையில் தரம் ஆறாம் வகுப்பு முதல் சிங்கள மொழி மூல வகுப்புகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்க முன்மொழியப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ் மொழியில் கற்கும் மாணவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார். ‘பெரும்பாலான பாடச் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் மாணவர்கள் தானாகவே பழகிவிடுவார்கள் என அமைச்சர் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் படிப்பில் முன்னேற முடியாமல் சிரமப்படுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று ஆங்கில மொழி அறிவு இல்லாமையாகும். அத்துடன் அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர்களின் வெற்றிடங்கள் உள்ளன.

இதேவேளை, பல்கலைக்கழக அமைப்பு, கல்வி முறை மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களின் ஆதரவுடன் ஆங்கில மொழித்திறனை வழங்க தனியான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: