ஜனாதிபதியின் வீட்டிற்கு முன்னால் போராட்டம்!

Thursday, July 4th, 2019

சேவையிலிருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சிப்பாய்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்னால் முகாமிட்டு கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

தங்களுக்கு உரிய வகையில் மீள் நியமனம் வழங்கும்வரை உயிர்நீங்கினாலும் போராட்டத்திலிருந்து விலகப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.

“கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பொலிஸ் சேவையிலிருந்து நீங்கிய முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்திருக்கின்றனர்.

நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களுக்கும் அதேபோல அரச ஜனாதிபதிக்கும் பல்வேறு கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்ட போதிலும், இதுவரை தீர்வு கிடைக்காத நிலையிலேயே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்ததாக அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

சேவையிலிருந்து நீங்கிய பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் சேவையில் இணைய வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை ஏற்று வந்த போதிலும் பொலிஸ் திணைக்களம் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து வெளியிடுகையில்,

“முன்னாள் பொலிஸ் அதிகாரி -‘2005ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை பொலிஸ் திணைக்களத்தின் சில திறனற்ற செயற்பாடு காரணமாக சேவையிலிருந்து விலக நேரிட்ட சிப்பாய்களே இன்று ஜனாதிபதியை சந்திக்க வந்துள்ளோம்.

பல மாதங்களாக ஜனாதிபதிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதங்கள் எழுதினோம். சந்திக்கவும் சந்தர்ப்பம் கேட்டோம். ஆனால் ஒரு கடிதத்திற்கும் பதில் கிடைக்கவில்லை. அரசியல் அடிவருடிகளுக்கு பதவிகளும், பட்டங்களும் கிடைத்த போதிலும் எமக்கு ஒரு பதில்கூட கிடைக்கவில்லை.

அண்மைய ஊடக சந்திப்பின்போதும் அதேபோல ஜனாதிபதி தேர்தல் மேடையிலும் சேவையிலிருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் நிபந்தனையற்று இணையலாம் என்று கூறியிருந்தார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் சுயேற்சையாக நாங்கள் இணைவதற்கு தயாரான போதிலும் இதுவரை சமிக்ஞை கிடைக்கவில்லை.

இராணுவத்தில் 11 ஆயிரம் சிப்பாய்களுக்கு ஒரே இரவில் மீள் நியமனம் வழங்கப்பட்ட போதிலும் இங்கே 3000 பேரே உள்ளனர்.ஜனாதிபதி தயார் என்ற போதிலும் பொலிஸ் ஆணைக்குழு தடுக்கின்றது. தீர்வு கிடைக்கும்வரை இந்த இடத்தைவிட்டு உயிர்பிரிந்தாலும் நீங்கமாட்டோம்” என கூறியுள்ளனர்.

Related posts: