சீனா, இந்திய உறவுகளை பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் விரிவுபடுத்துவதே ஜனாதிபதியின் இலக்கு – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு!

Thursday, July 27th, 2023

சுதந்திர இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கை தற்போதைய காலகட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்துடனும் நெருக்கமாகச் செயற்பட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் எதிர்காலத்தில் இலங்கைக்கு பல அபிவிருத்தி நன்மைகள் கிடைக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீனா மற்றும் இந்தியாவுடனும் பிராந்தியத்திலும் உலகலாவிய ரீதியிலும் உள்ள அனைத்து நாடுகளுடனும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதே ஜனாதிபதியின் நோக்கமாக இருப்பதாகவும், இதற்காக எதிர்காலத்தில் பல உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் –

சில அரசாங்கங்கள் சீன அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணி வந்தன. சில அரசாங்கங்கள் மேற்கத்தேய நாடுகளுடன் அதிகளவில் உறவைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போதைய அரசாங்கம் உயர்மட்டத்திலான உறவையும் வெளிநாட்டுக் கொள்கையையும் முன்னெடுப்பதால் எமக்கு அவ்வாறான குற்றச்சாட்டுகள் எழவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அணிசேரா வெளியுறவுக் கொள்கை பின்பற்றி வருகிறார். அதேபோல் அயல் நாடான இந்தியாவுடன் உறவை பேண வேண்டியது அவசியம் என்பதோடு, எமது எதிர்கால அபிவிருத்திக்கும் அது பயனளிக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் மேற்கொண்ட இந்திய விஜயத்தின் ஊடாக இந்தியாவுடனான உறவை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. மேலும் இரு நாடுகளினதும் அபிவிருத்தி மற்றும் முதலீட்டுச் செயற்பாடுகள் குறித்து சாதகமாக இணக்கப்பாடுகளை எட்டவும் முடிந்தது.

இந்நாட்டிற்கு வர வேண்டிய 85% கப்பல் சேவைகள் இந்தியாவிற்கே செல்கின்றன. அதனால், இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு நம் நாட்டிலுள்ள துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் பட்சத்தில் பொருளாதார ரீதியில் நல்ல பலன்களை அடைய முடியும். அத்துடன், இரு நாடுகளுக்குமிடையிலான நேரடி கப்பல் சேவை மற்றும் பலாலி விமான நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பிலான விடயங்களும் உத்தேச மட்டத்தில் உள்ளன.

இலங்கையை எரிசக்தி மையமாக மாற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கடல் காற்று சக்தி, சூரிய சக்தி மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றலை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆலோசிக்கப்படுகிறது. திருகோணமலை எண்ணெய்க் குதங்களை நவீனமயமயப்படுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகச் செயற்பாடுகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி சீன விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். மற்றைய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்வார். இங்கு இந்தியா, சீனா போன்ற நாடுகள் மட்டுமின்றி, மாறிவரும் உலக நாடுகளைப் பற்றியும் அறிந்து கொண்டுள்ளோம். பிராந்திய ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளுடனான உறவையும் மேம்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

மற்றைய நாடுகளுடனான அரசியல் தொடர்புகளை வலுப்படுத்தும் பணிகளை மாத்திரமே இதுவரையில் வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வந்தது. அதற்கு இணையாக பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றிவருகிறோம். நாடென்ற வகையில் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முடிந்துள்ளது. தற்போதைய வெளிவிவகாரக் கொள்கையை இலங்கை வரலாற்றில் சிறந்த யுகமாகக் கூறலாம். இதன் காரணமாக சர்வதேச சமூகத்துடன் மிகவும் நெருக்கமாக செயற்படுவதுடன் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தவும் வாய்ப்பாக உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அணிசேரா வெளிவிவகாரக் கொள்கையினால் எமது நாடு இன்று அனைத்து நாடுகளினதும் ஆதரவைப் பெற முடிந்துள்ளது. இலங்கையின் வரலாற்றில் வெளிநாட்டு உறவுகளின் சிறந்த சகாப்தம் என தற்போதைய வெளியுறவுக் கொள்கையை கூறலாம்.

இதன் காரணமாக அனைத்து சர்வதேச நாடுகளுடனும் நெருக்கமாக செயற்படுவதுடன் நாட்டிற்கு பல அபிவிருத்தி நன்மைகளை பெற்றுக்கொடுக்கக்கூடியதாக உள்ளது.’’ என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்டதக்கது

000

Related posts: