சிறையில் 31 அரசியல் கைதிகள் மாத்திரமே உள்ளனர் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, December 6th, 2022

தற்போது சிறையில் 31 அரசியல் கைதிகள் மாத்திரமே இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான பாதீட்டு ஒதுக்கம் குறித்த குழுநிலை விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 400 அரசியல் கைதிகள் இருந்தனர். பின்னர் அந்த எண்ணிக்கை 110 ஆக குறைக்கப்பட்டது.

அவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் நிறைவு செய்வதற்காக கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட மேல் நிதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இதனையடுத்து குறித்த எண்ணிக்கை 60ஆக குறைந்தது.

இந்தநிலையில் தற்போது 16 குற்றவாளிகளும் 15 சந்தேகநபர்களும் உள்ளனர். குறித்த வழக்குகளை விரைவில் நிறைவு செய்யுமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சமர்பித்த கடிதத்தை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷக்கு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நட்டஈடு தொகை தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: