ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல் கட்டமைப்பிற்குளே வரவேண்டும் அல்லது வெளியேற வேண்டும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Monday, June 6th, 2022

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அரசியல் கட்டமைப்பிற்குள் உள்வாங்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர்கள் அதற்கு தயார் என்றால் அவர்கள் அந்த நடைமுறையில் இணைந்துகொள்ளலாம் என்றும் அதன் மூலம் நாட்டில் தற்போது காணப்படுகின்ற பதட்டத்தை சிறிது குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின்போது அவர்கள் உள்ளே வரவேண்டும் அல்லது வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

மேலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பொருளாதாரத்தை தவறான முறையில் கையாண்டமையே காரணம் என ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் உதவிகளிற்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைக்கு கொவிட் காரணமில்லை பல நாடுகள் கொவிட்டின் பின்னர் மீண்டும் முன்னேற்ற பாதையில் பயணிக்கின்றன என தெரிவித்துள்ள பிரதமர் பொருளாதாரத்தை தவறாக கையாண்டமையே இந்த நிலைக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

2019 இல் பிரதமர் பதவியை இழந்தது முதல் நான் நாட்டின் பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்துவருகின்றேன்  என  தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க தற்போதையை நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை தவிரவேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் சிறந்த விதத்தில் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள பிரதமர் மக்கள் ஐக்கியத்துடன் செயற்படுமாறும் கேட்டுகக்கொண்டுள்ளார். நாங்கள் பொருளாதார அரசியல் நெருக்கடியிலிருந்து இணைந்து மீள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் சில அரசியல் மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர் என்பதை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்துவைப்பது கைதுசெய்வது போன்ற நடவடிக்கைகள் குறித்து பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீதிபதிகளை அடிப்படையாக வைத்தே கைதுகள் இடம்பெறுகின்றன. சமீபத்தைய வன்முறைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சட்டத்தை எவர் மீறியிருந்தாலும் அவர்களின் தகுதியை கருத்தில் கொள்ளாமல் அவர்களை நீதிவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் விசாரணைகளின் அடிப்படையில் ராஜபக்சாக்களிற்கும் இது பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.

நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என்பதாலேயே பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன் எனவும் அவர்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: