சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி நீக்கத்தைத் தொடர்ந்து அரிசி விலை குறையும் என அரசாங்கம் எதிர்பார்ப்பு!

Wednesday, March 1st, 2023

நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரிசி விலையில் கணிசமான வீழ்ச்சியை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில், நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை திருத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதியை திங்கட்கிழமை கோரினார்

இது தொடர்பில் நேற்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இந்த நடவடிக்கையானது எதிர்வரும் காலங்களில் அரிசியின் சந்தை விலைகளில் கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

நெல் கொள்முதல், அரிசி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்படுவது வரி மீளாய்வின் போது கண்டறியப்பட்டது.

ஒரு கிலோ நெல்லுக்காக விவசாயிக்கு செலுத்தப்படும் தொகைக்கு மேலதிகமாக, சமூகப் பாதுகாப்பு வரியாக ஒரு கிலோகிராம் அரிசிக்கு சுமார் 6-7 ரூபா வரை சுமத்தப்பட வேண்டிய மேலதிக செலவு தவிர தோராயமாக ரூ.6-7 செலவாகியுள்ளதாக நெல் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது சந்தையில் அரிசிக்கான அதிகபட்ச விலையை நிலைநிறுத்தும் வகையில், விவசாயிகளுக்கு ஒரு கிலோ நாட்டு அரிசிக்கு ரூ.100க்கு மேல் அதிக விலையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நாட்டு அரிசியை குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: