சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் சுற்றி வளைப்பு! – 15 பேர் கைது

Tuesday, May 31st, 2016

மனித படுகொலை உள்ளிட்ட பல்வேறு பாதாள உலகக் செயற்பாடுகளுக்கு, பாதாள உலகக் குழுவினருக்கு ஆயுதங்களை விநியோகம் செய்த இரண்டு முக்கிய ஆயுதக் களஞ்சியங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு மற்றும் கம்பளை பகுதிகளில் இந்த ஆயுதக் களஞ்சியங்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்துள்ளன.

அண்மையில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ஆர்மி சம்பத் மற்றும் புளுமென்டல் சங்க ஆகியோரிடம் நடத்திய விசாரணைகளின் போது இந்த ஆயுதக் களஞ்சியங்கள் பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளன.

இதன்படி, பொலிஸ் மா அதிபரின் நேரடி வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் ஊடாக பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன், சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரி56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ரிவோல்வர்கள், மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகள், ஸ்னைப்பர் ரக துப்பாக்கி, அரோகன் ஆயுதம், தோட்டாத் துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பண்டமாற்று அடிப்படையிலும், வாடகை அடிப்படையிலும், ரொக்கப் பண அடிப்படையிலும் இந்த ஆயுதங்கள் பாதாள உலகக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆயுத விற்பனையுடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதுடன், மேலும் ஆயுதங்களும் மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: