அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க இவ்வாரம் வவுனியா விஜயம் – தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை சந்தித்து கலந்துரையாடுவார் என்றும் தெரிவிப்பு!

Tuesday, November 15th, 2022

அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க நவம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு விஜயம் செய்யும் போது, இன நல்லிணக்கத்திற்கான அடுத்த நகர்வு ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

எனினும் இன நல்லிணக்கச் செயற்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரன், நல்லிணக்கத்தை துரிதப்படுத்துவதற்கும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கும் அதிபர் செயலகத்தில் புதிய பிரிவொன்று ஸ்தாபிக்கப்படுவது தொடர்பில் தமது கட்சியுடன் ஆலோசிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை அமர்வுகளின் பின்னர் ஒவ்வொரு வாரமும் நல்லிணக்க வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக அமைச்சர்கள் குழு ஒன்று கூடுவது குறித்து தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விருப்பம் தெரிவித்த அதிபரின் அண்மைக்கால அறிக்கைகளை தாம் வரவேற்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: