கொரோனா கட்டுப்படுத்தலுக்கு யாழ் மக்களின் ஒத்துழைப்பு போதாதுள்ளது – யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி கவலை!

Tuesday, May 25th, 2021

பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வீடுகளில் இருக்கவேண்டியது அவசியமானது என யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –   

யாழ்ப்பாணம் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற ரீதியில், யாழில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசிய நிலை காணப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று நிலைமையானது ஏனைய இடங்களோடு ஒப்பிடும்போது கட்டுப்பாட்டில் உள்ளது. யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த வருடம் கொரோனா 1 ஆவது   அலையில் 17 தொற்றாளர்களும், இரண்டாவது அலையில் 890 தொற்றாளர்களும், தற்போதுள்ள மூன்றாவது அலையில் ஆயிரத்து 398 நபர்களும் கொரோனா தொற்றாளர்களாக  இனங்காணப்பட்டுள்ளார்கள்.

எனினும் யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற அடிப்படையிலும், யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி என்ற அடிப்படையிலும், யாழில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறுபட்ட செயற்பாடுகளை  இராணுவத்தினரின்  மூலம் முன்னெடுகின்றோம்.  எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. ஆனால் பொதுமக்களின் ஒத்துழைப்பு போதாமையாகவுள்ளது யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையற்று வீதிகளில் நடமாடாது வீடுகளில் இருப்பது அவசியம் என்பதுடன் ஏதாவது கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள். அவ்வாறு செயற்படுவதன் மூலம் உங்களையும் உங்கள் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: