களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு மேலும் 10 ஆயிரம் மெட்றிக் தொன் டீசல் – கனியவளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை!

Friday, January 21st, 2022

வாக்குறுதியளித்தவாறு 10 ஆயிரம் மெட்றிக் தொன் டீசலை களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு வழங்க கனியவளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்றிரவு குறித்த எரிபொருள் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு கிடைத்ததாக அதன் பிரதான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று மதியம்வரையில், களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டு மின்பிறப்பாக்கிகளையும் தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் மீளிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 286 மெகாவோட் மின்சாரம், தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு இணைக்கப்படுகிறது. இதற்காக, நாளொன்றுக்கு ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 800 மெட்றிக் டன் வரையிலான டீசல் அவசியமாகின்றது.

இதன்படி, கனயவளக் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ள டீசல் தொகையானது, மேலும் 8 நாட்களுக்கு மின்னுற்பத்திக்கு போதுமானதாகும்.

இதேவேளை, சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம், உலை எண்ணெய் தொடர்பான பிரச்சினைக்கு மீளவும் முகங்கொடுத்துள்ளது. அதில் இன்றையதினத்திற்கு போதுமான உலை எண்ணெயுள்ள நிலையில், அதன்மூலம் தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு 108 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படுகிறது. இதேவேளை, தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு 300 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கி தொடர்ந்தும் செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: