கல்வி – சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Saturday, May 13th, 2023

அடுத்த வருடத்தில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்தா மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பாடசாலைகளுக்கு இம்மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கு இன்று 13ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இக்காலப்பகுதியில் நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நிமித்தம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

பின்னர் மே மாதம் 25ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 20ஆம் திகதி வரையில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இதன்படி மே மாதம் 29ஆம் திகதி இந்த பரீட்சைகள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட பாடசாலை விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டன.

பரீட்சைகள் 29ஆம் திகதி ஆரம்பமாகின்றமையால், பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் விடுமுறை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.

இவ்வாறான பின்னணியில் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான முக்கியத் தீர்மானமொன்று கல்வி அமைச்சினால் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, இம்மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஏற்கனவே காலதாமதமாகியுள்ள கல்விப் பொதுத் தராதார சாதாரணத் தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி 29ஆம் திகதி நடைபெறுமா? என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகள் விடைத்தால் மதிப்பீட்டு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கான காரணம். இது குறித்து ஏற்கனவே பதிலளித்துள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்ட திகதியில் பரீட்சைகள் அரம்பமாகுமென்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: