கனடாவில் யாழ்.இளைஞர்கள் இருவர் பலி!

Saturday, April 30th, 2016

கனடா ஒன்ராரியோவில் உள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளை வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்கள் இருவர் பரிதாபமாக மரணமாகியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவரவதாவது – உறவினர்களான 7 இளைஞர்கள் இப் படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது படகு கவிந்து மூழ்கியதில் இரு இளைஞர்கள்கள் உயிரிழந்துள்ளனர்.

24 வயது நிரம்பிய கஜன் கலாபாகன் , மற்றும் 21 வயது நிரம்பிய லிங்கவிஜிதன் கிருபநாயகம் ஆகிய இருவருமே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

உறவினர்கள் எழுவர் குறித்த படகில் இருந்ததாகவும், அவர்களில் இவர்கள் இருவரும் உயிர்காப்பு கவசம்(Life Jacket) அணியாதிருந்துள்ளனர். படகு கவிழ்ந்தமை தொடர்பாக உடனடியாக காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கிடையில் பூங்கா மீட்புக் குழுவினர் இருவரை மீட்டதாகவும் இருவர் மட்டும் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திங்கள் இரவு காணாமல் போனவர்கள் செவ்வாய்க்கிழமை மதியமளவில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் நேற்று முன்தினம் அவர்கள் இனம் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர். அத்தோடு இந்த ஏரியில் இது படகு செலுத்துவதற்கான காலம் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் குறிப்பிட்ட ஏரி பனியில் இருந்து விடுபட்டிருந்ததாகவும் சம்பவம் நடந்த வேளை ஏரி நீரின் வெப்பநிலை 5 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடும் குளிர் நீராக இருந்ததால் தான் அவர்களால் நீந்திக் கரை சேர முடியாமல் போய் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஒன்ராரியோ மாகாண காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: