எழுத்துமூலம் அறிவித்தால் விசாரணை –  அமைச்சர் தயாசிறி ஜயசேகர!

Friday, July 21st, 2017

2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் போட்டி நிர்ணயம் இடம்பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, எழுத்துமூலமாக அறிவிக்கும் பட்சத்தில் விசாரணை நடத்தத் தயார் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, அர்ஜுனவின் குற்றச்சாட்டுத் தொடர்பில் அமைச்சின் தீர்மானம் பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 “இது இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. அர்ஜுன ரணதுங்க, இந்த விடயத்தை அப்போதே சொல்லியிருந்தால், பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். ஆனால் காலம் தாழ்த்தியே இதனை முன்வைத்திருக்கிறார். எவ்வாறெனினும், எழுத்துமூலமாக அறிவிக்கும் பட்சத்தில், நாம் விசாரணை நடத்தத் தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

Related posts: