எமது பிரதேசத்தை முன்னுதாரணமான பிரதேசமாக மாற்றி அமைக்க ஒன்றுபட்டு உழைப்போம் –  தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Tuesday, June 12th, 2018

வேலணைப் பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் குறித்த பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கட்சியின் வேலணை பிரதேச ஆலோசனை சபைக் கூட்டம் இன்றையதினம் (12) தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் வேலணைப் பிரதேச அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் –

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வேலணை பிரதேசத்தின்  அபிவிருத்திக்காக எமது கட்சியால் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்றிட்டங்களும்  மக்கள் தேவைகளை அறிந்தே முன்னெடுக்கப்பட வேண்டும்.

கடந்தகாலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  அவர்கள் அமைச்சராக இருந்தபோது எமது பிரதேசத்திற்கு  பல்வேறுபட்ட நலத்திட்டங்களையும் கட்டுமானங்களையும் தொழில்வாய்ப்புக்களையும் வாழ்வாதார மற்றும் சுகாதாரம் கல்வி உள்ளிட்ட பலவாறான செயற்றிட்டங்களை பெற்றுக்கொடுத்து இப்பகுதி மக்களின் வாழ்வியலில் ஒரு புத்துணர்ச்சியை உருவாக்கியிருந்தார் என்பதுடன் இன்றும் அந்த முன்னெடுப்புகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

அந்தவகையில் அவரது எண்ணக் கருவான மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்பதற்கிணங்க நாம் ஒவ்வொருவரும் மக்களது தேவைகளை இனங்கண்டு அவர்களது வாழ்வில் தேவைகளை வெற்றிகொள்ளச் செய்து ஒளிமயமான வாழ்வியலை உருவாக்கி எமது பிரதேசத்தை ஏனைய பிரதேசங்களுக்கு முன்னுதாரணமான பிரதேசமாக மாற்றி அமைக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது வேலணை பிரதேச சபையின் சபைத்தொடர்களில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கட்சியின் ஆலோசனை சபை உறுப்பினர்களுடன் ஆராயப்பட்டதுடன் குடிநீர் பிரச்சினை மற்றும் வாழ்வாதாரம் வீடமைப்பு தொடர்பான பிரச்சினைகளும் விரிவாக ஆராயப்பட்டன.

அத்துடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் படிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனை சபை உறுப்பினர்களால் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: