இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை – ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு!
Tuesday, January 25th, 2022
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கும் தலா ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைப்பற்றப்பட்ட கடற்றொழில் உபகரணங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட 8 படகுகளில் ஒரு படகும் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 7 படகுகளுக்குமான உரிமையாளர்கள் இன்று நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் அவை தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றையதினம் விடுதலை செய்யப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக, இலங்கை கடற்பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைந்தமை, கடற்றொழில் உபகரணங்களை தொடக்கறுத்து வைத்திருந்தமை, சட்டவிரோத தொழில் முறையைப் பயன்படுத்தியமை ஆகிய 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


