இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாவட்ட மட்டத்தில் மீளாய்வு!

Monday, May 2nd, 2022

நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீதி மற்றும் பாலங்கள் அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் மாவட்ட மட்டத்தில் அதன் முன்னேற்றம் ஆகியவை நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் மீளாய்வு செய்யப்பட்டது.

இதன் கீழ், மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி மற்றும் பாலத் திட்டங்கள் மற்றும் உத்தேச திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் முதன்மையான வீதி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணியை முன்னெடுத்துச் செல்லும் நெடுஞ்சாலைகள் அமைச்சும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட மற்றும் மாகாண அதிகாரிகளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு செயற்படுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அண்மைக்காலமாக நாட்டில் பெருமளவிலான வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. செயல்பாட்டில் உள்ள சில திட்டங்களையும், தொடங்கப்படாமல் உள்ள பல திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

ஜனாதிபதியின் கருத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 100,000 கிலோமீற்றர் வீதித் திட்டம், ஒருங்கிணைந்த கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், ரன் மாவத் திட்டம், மகநெகுமவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீதி அபிவிருத்தித் திட்டங்கள், கிராமத்துடன் உரையாடல் போன்ற வேலைத்திட்டங்களின் கீழ் வீதி மற்றும் பால அபிவிருத்தித் திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளன. அதை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: