இந்திய அரசாங்கத்தினால் மேலும் 50 பேருந்துகள் அன்பளிப்பு – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயபல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிப்பு!

Sunday, February 5th, 2023

இந்திய அரசாங்கத்தினால் மேலும் 50 பேருந்துகள், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(5) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 500 பேருந்துகள் வழங்கப்படவுள்ளன. அதன் இரண்டாவது கட்டமாக இந்த பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்நிலையில் நாடாக்களை வெட்டி இரண்டு பேருந்துகளை திறந்து வைத்த ஜனாதிபதி, இந்தியா கையளித்த பேருந்துகளைப் பார்வையிட்டார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்திய அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்ததாக, இந்தப் பேருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன் முதல் தொகுதியாக 75 பேருந்துகள் அண்மையில் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 40 பேருந்துகளின் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இதன்படி, இலங்கைக்கு இதுவரை 165 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 500 பேருந்துகள் வழங்கும் திட்டம் 2023 மார்ச் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் இந்தியா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: