அரச பாடசாலைகள் அனைத்தும் 194 நாட்களே நடத்தப்படும் – கல்வி அமைச்சு!

Monday, May 7th, 2018

அரச பாடசாலைகள் அனைத்தும் இவ்வருடம் 210 நாட்களுக்குப் பதிலாக 194 நாட்களே நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்று கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. வழமையாக அரச பாடசாலைகளில் வருடமொன்றுக்கு 210 நாட்கள் பாடசாலை நடத்தப்படல் வேண்டும் என்பது நியதி. ஆனால் இம்முறை இவ்வருடத்தில் வரும் விடுமுறை தினங்களைக் கருத்திற்கொண்டால் 210 நாட்கள் நடத்தமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனால் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் 194 நாட்கள் பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சு சுற்று நிரூபமொன்றை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட 33/2017 ஆம் இலக்க 31.08.2017 ஆம் திகதி குறிப்பிட்ட கல்வியமைச்சின் சுற்று நிரூபம் தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி தமிழ் – சிங்களப் பாடசாலைகளில் முதலிரு தவணைகளிலும் எந்த மாற்றமுமில்லை. ஆனால் மூன்றாம் தவணை செப்டெம்பர் 3 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 30 ஆம் திகதி வரை நடைபெறும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணையில் மாற்றமில்லை. ஆனால் 2 ஆம் தவணையில் இரண்டு கட்டங்களாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் திகதி தொடக்கம் மே 14 ஆம் திகதி வரை பாடசாலை நடைபெறும். அதாவது புனித ரமழான் நோன்புக்காக 15.05.2018 தொடக்கம் 17.06.2018 வரைக்கும் முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும். இரண்டாம் கட்டமாக ஜீன் 18 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடைபெறும். முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக ஓகஸ்ட் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை திறக்கப்பட்டிருக்கும். இது தொடர்பான சுற்று நிரூபம் சகல மாகாண கல்விச் செயலாளர்கள் தொடக்கம் பாடசாலை அதிபர்கள் வரை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: