அரச உத்தியோகத்தர்கள் றக்பி வீரர்கள் போல செயற்பட வேண்டும் – வடக்கின் ஆளுநர்!

Friday, January 11th, 2019

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அவர் மாவட்டத்தின் வெள்ளம் அனர்த்தம் தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்டதுடன் வெள்ளத்திற்கு பின்னராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணிகள், மற்றும் தேவைகள் தொடர்பிலும் கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சியில் இராணுவம், மற்றும் அதிகாரிகள் பொது மக்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட பணிகள் காரணமாக உரிழப்புக்கள் மற்றும் பாரிய அழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடிந்திருக்கிறது அதற்காக அனைவருக்கும் அவர் நன்றியை தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கிளிநொச்சிக்கான சவால்கள் இன்னும் தீர்ந்துவிடவில்லை. அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். அத்தோடு எல்லாத் திணைக்கள அதிகாரிகளுக்குமிடையே ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பு இருக்கவேண்டும். ஒருவர் செய்கின்ற பணி இன்னொருவருக்கு தெரியாது இருக்கிறது. இது கவலைக்குரியது.

உத்தியோகத்தர்கள் றக்பி வீரர்கள் போன்று இருக்க வேண்டும், கோல்ப் வீரர்கள் போன்று அல்ல எனக் குறிப்பிட்ட அவர், கோல்ப் விளையாட்டு வீரர்கள் போன்று நாகரீகமாக உடையணிந்து, கனவான்கள் போன்று இருந்தால் மக்களுக்கு பணியாற்ற முடியாது எனக் குறிப்பிட்டார்.

தமிழ் மொழி எங்கள் அடையாளம் பத்தாயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த மொழி உலகில் உள்ள மூத்த பத்து மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இதனை ஹவார்ட் பல்கலைகழகமும் ஆராய்ச்சி மூலம் உறுதி செய்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் பன்னங்கண்டி பிரதேசத்திற்கு சென்று அங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமைகளையும் நேரில் ஆராய்ந்துள்ளனர்.

Related posts: