போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் ஆவணங்கள் திருட்டு – ஜனாதிபதி!

Tuesday, January 22nd, 2019

நாட்டில் போதைப் பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நூற்றுக் கணக்கானவர்களின் ஆவணங்கள் தற்போது காணாமல் போயுள்ளன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நேற்று தொடக்கம் 28 ஆம் திகதி வரை சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் தொடக்க நிகழ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவிக்கையில்,

நான் இன்று முல்லைத்தீவிற்கு வந்தது இதற்கு முன் இந்த பிரதேசத்திற்கு வந்த அந்த நோக்கத்திற்காக அல்ல. இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் நாங்கள் சரியாக பேசிக்கொண்டோம். மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகத்தான் அன்று நாங்கள் வந்தோம் மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சனைகளை பற்றி பேச்சு நடத்தத்தான் நாங்கள் முன்பு இங்கே வந்தோம்.

ஆனால் அன்று பேசாத விடயம் ஒன்றுதான் இந்த மதுபோதை பிரச்சினை. இந்த போதைப் பொருள் எங்கள் நாட்டிற்கு மட்டும் அல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சவாலாகத்தான் இருந்து வருகின்றது.

உலகத்திலே இறுக்கமான சட்டங்கள் உள்ள நாடுகளில் போதைப் பொருளினை கட்டுப்படுத்த இலகுவாக இருக்கும். எமது நாடு ஒரு சுதந்திர ஜனநாயக நாடு எதையும் சுதந்திரமாக செய்து கொள்ள முடியும் நல்லவற்றையும் சுதந்திரமாக செய்துகொள்ள முடியும் மோசமான விடையங்களையும் சுதந்திரமாக செய்ய முடியம்.

ஆனால் கிடைத்த சுதந்திரத்தை வைத்துக் கொண்டு நல்ல காரியங்களை மாத்திரம் செய்துகொள்ள வேண்டும் அதனை பயன்படுத்தி தவறான விடையங்களை செய்யக் கூடாது சுதந்திரம் கிடைத்துள்ளது என்ற காரணத்திற்காக மக்களை கொலை செய்ய முடியாது கொள்ளையடிக்க முடியாது. சூறையாட முடியாது. மோசமான தவறான எந்த ஒன்றையும் செய்ய முடியாது.

ஆனால் போதைப் பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்தான் என்ன போதைப் பொருளை பயன்படுத்தி செய்யக்கூடாத அனைத்தினையும் அவர்கள் செய்கின்றார்கள். போதைபொருளை பயன்படுத்துபவர்கள் நோயாளிகள் ஆக்கப்படுகின்றார்கள். போதைப்பொருள் வியாபாரிகள் சில நாடுகளில் அரசாங்கத்தினை கவிழ்த்து விடுகின்றார்கள் போதைப் பொருள் வியாபாரிகள் அரசியல் வாதிகளை வெளியேற்றுகின்றார்கள்.

இந்த வியாபாரிகள் அவர்களுக்கு தேவையான வசதியானவற்றை அரசாங்கம் ஊடாக உருவாக்குகின்றார்கள். வியாபாரிகள் தமக்கு விருப்பமான அரசியல் வாதிகளை ஆட்சியில் அமர்த்துகின்றார்கள். வியாபாரிகள் தமக்கு எதிரான அசாங்கத்திற்கு சதி செய்கின்றார்கள். சிறப்பாக வேலை செய்கின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள்.

பொலிஸாராக இருக்கலாம், முப்படையினராக இருக்கலாம் மதுவரி திணைக்களங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் அவர்கள் சரியாக வேலை செய்தால் அவர்களுக்கு எதிராக பல விதமான வேலைகளை போதைப்பொருள் வியாபாரிகள் செய்து வருகின்றார்கள் இவ்வாறான உத்தியோகத்தர்களை இடம்மாற்றம் செய்வதற்கும் முயற்சி எடுக்கின்றார்கள்.

இந்த போதைப் பொருள் என்றால் உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் இங்கு பாடசாலை மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் எல்லோரும் இருக்கின்றார்கள் நான் முல்லைத்தீவிற்கு ஏன் வந்தேன் இந்த போதைப்பொருளுக்கு எதிரான பேராட்டம் என்னால் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது அல்ல, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே இதனை தொடங்கியுள்ளேன். நான் அரச சேவையில் சிறிய பதவியில் இருக்கும் போது அந்த காலத்தில் போதைப் பொருளுக்கு எதிராக செயற்பட்டு இருக்கின்றேன்.

1989 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மதுவுக்கு எதிராக நாடு பூராகவும் பிரச்சாரம் செய்தேன். சுகாதார அமைச்சராக நான் இருக்கும் போது போதைப்பொருளுக்கு எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்தேன். அன்று என்னால் செய்து கொள்ள முடியாத பல விடயங்களை நான் ஜனாதிபதி ஆன பின்னர் சட்ட திட்டங்களை நான் கொண்டு வந்தேன் உடலுக்கு விசமான பல போதைப் பொருட்கள் எங்கள் நாட்டில் இருக்கின்றன உங்கள் கிராமங்களில் அனேகமான இடங்களில் கசிப்பு இருக்கின்றன. அவை எல்லாம் நச்சு தன்மை உள்ளன அதனை குடிப்பவர்கள் மெதுமெதுவாக மரணித்து விடுவார்கள்.

போதைப் பொருள் வில்லைகள், போதைப் பொருள் தூள் என்பன நாட்டில் எங்களுக்கு சவாலாக இருக்கின்றன. இலங்கை ஒரு தீவு உங்களுக்கு தெரியும் சட்ட விரோதமா போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு இந்த தீவிற்குள் வியாபாரம் நடத்த இலகுவாக இருக்கின்றது. நாட்டுக்கு இந்த பொருட்கள் வருவதை தடுப்பதற்கு பல வேலைத்திட்டத்தினை செயற்படுத்தியுள்ளோம்.

இதற்கு எதிராக பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள் சேவை செய்து வருகின்றார்கள். ஆனால் எல்லாவற்றையும் மீறி போதைப் பொருள் வியாபாரிகள் நாட்டிற்குள் கொண்டு வந்து விடுகின்றார்கள். கடந்த சில மாதங்களில் போதைப்பொருள் கோடிக்கணக்கில் நாட்டிற்குள் கொண்டு வந்தார்கள் அவற்றையும் உத்தியோகத்தர்கள் கண்டு பிடித்தார்கள். இவ்வாறு பணியாற்றிய உத்தியோகத்தர்களை அடுத்த 28 ஆம் திகதி கௌரவிக்கவுள்ளேன். 21 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை செயற்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். இந்த வேலைத்திட்டத்தில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

போதைப் பொருள் தொடர்பில் மக்கள் அறிவிப்பதற்காக 1984 என்ற இலக்கத்தினை கொடுத்துள்ளோம். சட்டவிரோமாக எங்கேயாவது போதைப் பொருள் இருந்தால் இந்த இலக்கத்திற்கு தொலைபேசி அழைத்து தகவலை கொடுங்கள் நாங்கள் தகவல் வழங்கும் நபர்களை பாதுகாப்பாக வைத்திருக்கின்றோம். நாடு முழுவதும் போதைக்கு எதிராக பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். நாங்கள் முல்லைத்தீவிற்கு 17 ஆவது மாவட்டமாக வந்துள்ளோம்.

இதற்கு முன்னர் 16 மாவட்டங்களில் வேலைத் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம். மதுபோதைக்கு எதிரான வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடையும் வேலைத்திட்டம் அல்ல. இந்த ஆண்டு நாடு முழுவதும் போதைக்கு எதிரான வேலைத்திட்டம் வேகமாக முன்னெடுக்கப்படவுள்ளது. நான் பிலிப்பைன்ஸ் சென்று வந்தபோது போதைப்பொருள் தடுப்பு சம்மந்தமாக பலவற்றை அறிந்து வந்தேன்.

பிலிப்பைன்ஸ் போதைப் பொருளால் அழிந்த ஒரு நாடு அந்த நாட்டு ஜனாதிபதி செய்த வேலைகளை நான் செய்யப் போவதில்லை அது செய்யப்போனால் அதற்கு எதிரானவர்கள் தான் இந்த நாட்டில் பலர் இருப்பார்கள். இந்த நாட்டில் இருக்கக்கூடிய நிறுவனக்காரர்கள் அதிகாரம் அதிகமாக இருக்கின்றது. மனிதஉரிமைகளை பற்றி பேசுசின்ற நிறுவனக்காரர்கள் போதைப் பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள்.

நான் மனித உரிமைகளுக்கு எதிராக பணியாற்றுகின்றேன் என்று சொல்லி எனக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். சிங்கப்பூரில் இருந்து நான் வரும்போது விமானத்தில் உள்ள பத்திரிகையில் இந்த செய்தி வந்திருந்தது. மனித உரிமை பற்றி கூக்குரல் போடுகின்றவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக அவர்கள் சத்தம் போடுவதில்லை இவர்கள் மனித உரிமை பற்றி பேசிக்கொண்டு போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாக்கின்றார்கள். மனித உரிமைபற்றி பேசுகின்ற அந்த நிறுவனங்களுக்கு பயந்து நான் இந்த போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையினை நிறுத்தப்போவதில்லை.

உங்கள் முகமூடிககைள அகற்றிவிட்டு மனித உரிமைகளுக்காக பணியாற்றுவது மாத்திரம் அல்ல போதைப் பொருளுக்கு எதிராகவும் செயற்பட முன்வாருங்கள் என்று நான் கூறுகின்றேன். இந்த நாட்டின் வறுமைக்கு மிக முக்கியமான காரணம் போதைப்பொருள். போதைப்பொருள் அதிகரித்த காரணத்தில் தான் ஏழ்மையும் வறுமையும் அதிகரித்துள்ளது.

போதைப் பொருளை அதிகளவில் பயன்படுத்துபவர்கள் ஏழை மக்கள்தான் அதன் காரணமாக அவர்கள் இன்னும் இன்னும் ஏழ்மைக்கு தள்ளப்படுகின்றார்கள் நோயாளர்கள் ஆகின்றார்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.

மனித உரிமைபற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருளை பற்றி சிந்திப்பதில்லை விரைவில் பிலிப்பைன்ஸ் நாட்டின் போதைப்பொருள் தடுப்பு சம்மந்தான குழு ஒன்று இலங்கைக்கு வரவிருக்கின்றது. இதுவரை போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்டத்தினை அடுத்த வாரத்தில் இருந்து தீவிரமாக முன்னெடுப்போம்.

நீங்கள் தெரிந்துகொள்ள இன்னும் ஒரு விசோடமான விடயத்தினை நான் கூறவிரும்புகின்றேன். போதைப்பொருள் விடயத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு அதன் பின்னர் சட்டத்தின் காரணமாக மரணதண்டனை நியமிக்கப்பட்டவர்களை தூக்கில் இடுவேன் என்று நான் தெரிவித்துள்ளதாக அண்மைக் காலத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் போதைப்பொருள் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் நூற்றுக் கணக்கானவர்கள் சிறையில் இருக்கின்றார்கள். அவர்களின் ஆவணங்கள் இப்பொழுது காணாமல் போயுள்ளன. மரணதண்டனை விதிக்கப்பட்டு அவர்களை சிறையில் அனுப்பி உள்ளார்கள் என்ற அந்த செய்தி மாத்திரம் தான் அங்கு உள்ளது. இவர் மரணதண்டனைக்கு ஆழனவர் என்று தான் அவரின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது வேறு ஒன்றும் அங்கு இல்லை. அதனுடன் சம்மந்தப்பட் ஆவணங்கள் ஒன்றுமே இல்லை நீதி அமைச்சிடமும் இல்லை இதற்கான காரணம் தான் என்ன போதைப்பொருள் வியாபாரிகள் இந்த ஆவணங்களை களவாடியுள்ளார்கள்.

இலங்கையில் இருக்கக்கூடிய சிறைக் கூடங்களில் ஒரே ஒருவரின் ஆவணம் தான் இருக்கின்றது அது பாகிஸ்தான் நாட்டு பிரஜையின் ஆவணம். இந்த போதைப் பொருளுக்காக பாகிஸ்தான் பிரஜையினை தூக்கில் இடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட இப்படியானவர்கள் ஒருவராவது இரண்டு பேராவது, மூன்று பேராவாது அவர்களின் ஆவணங்கள் எப்படியாவது நான் தேடிகண்டுபிடிப்போன் இதற்கான நடவடிக்கையினை ஒருநாளும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதனுடன் சம்மந்தப்ட்ட ஆட்கள் பின்னணியின் பலபேர் உள்ளார்கள் அரசியல் வாதிகளும் இருக்கின்றார்கள். அரசாங்க உத்தியோகத்தர்களும் பின்னணியில் இருக்கின்றார்கள். போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான எல்லா தகவல்களும் அவர்கள் கொடுப்பார்கள் எதிர்வரும் காலத்தில் நல்லவர்களை போல இருக்கின்றவர்களை நாட்டிற்கு வெளிப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: