அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயற்படுகின்றனர் ஜி.எல் பீரிஸ்!

Thursday, April 8th, 2021

அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள் என தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், மாகாண சபை தேர்தல் தொடர்பில் சுதந்திர கட்சியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி தீர்மானமின்றி நிறைவு பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மஹரகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் நிகழ்வில் கலந்துக் கொண்டன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் பல சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்களும் எதிர்க்கட்சியினருக்கு ஏற்றாற்போல் செயற்படுகிறார்கள்.

ஒரு தரப்பினரது நோக்கம் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதாக காணப்படுகிறது. இவ்வாறான செயற்பாடு மக்களாணைக்கு முரணானது என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. பழைய தேர்தல் முறையில் தேர்தலை நடத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்த யோசனை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல் குறித்து கட்சி தலைவர்கள் உறுதியான தீர்மானத்தை விரைவாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்துபோட்டியிடுவதாக இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் தனித்து செல்லும் நிலைப்பாட்டில் அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளார்கள்.

மாகாண சபை தேர்தல் குறித்து கடந்த வாரம் சுதந்திர கட்சியினருடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம் பெற்றது. எவ்வித தீர்மானமும் இல்லாத வகையில் பேச்சுவார்த்தை நிறைவுப் பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி ஊடாக அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து மாகாண சபை தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளோம்.

அரசாங்கத்தின் குறைப்பாடுகளை நபாட்டு மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அத்தவறுகளை திருத்திக் கொள்வது அவசியமாகும் என்றார்.

Related posts: