அத்தியாவசிய கடமைகளுக்கு செல்வோருக்காக நீண்ட நாள்களின் பின்னர் மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெதரிவிப்பு!

Wednesday, July 14th, 2021

நாட்டில் நீண்ட நாள்களாக நடைமுறையில் இருந்த பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு இன்றுமுதல் மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கையில்-  மட்டுப்படுத்தப்பட்ட வகையில் புகையிரத சேவைகளும் பேருந்து போக்குவரத்து சேவைகளும் இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.

அத்தியாவசிய சேவைகளை கவனத்திற்கொண்டு அத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் இன்று புதன்கிழமைமுதல் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க காலையில் கடமைக்கு செல்வோருக்கு சில புகையிரத சேவைகள் அதேபோன்று மாலையில் அவர்கள் வீடு திரும்புவதற்காக சில புகையிரத சேவைகள் என புகையிரத சேவைகளை மேற்கொள்ளப்பட்டன.

அதே போன்று மாகாணங்களுக்கு இடையில் அரசாங்க ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிக்கும் தனியார்துறை ஊழியர்கள் ஆகியோரை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தொடர்பில் நடைமுறையிலுள்ள வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி அந்த சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பேருந்து மற்றும் புகையிரதங்களில் பயணிப்போர் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருப்பது முக்கியமாகும்.

உதாரணமாக துறைமுகம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் போன்ற அத்தியாவசிய கடமைகளுக்காக வருவோர் அன்றைய தினத்தில் கடமைக்கு வருவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை கைவசம் வைத்திருப்பதும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் அவ்வாறானவர்கள் பயணிப்பதற்காகவே இன்றுமுதல் சில பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை முன்னெடுக்கப்பட்டதாகவும்  மேலும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related posts: