அத்தியவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல நடவடிக்கை – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020

நாட்டின் தற்போதைய நிலையில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெஸில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்காக இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கு மேலதிகமாக வாரம் முழுவதிலும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் 5000 ரூபா நிவாரணம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சாரம், நீர், எரிபொருள், எரிவாயு, போக்குவரத்து, சுகாதாரம், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட மக்களுக்கு அத்தியவசியமான சேவைகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுப்பதற்கு முறையான நடவடிக்கையொன்றை திட்டமிடுவதாக, அத்தியவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அவர் இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.

இதேநேரம், வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை தடுப்பதுடன், பாதிப்பிற்குள்ளாகக் கூடிய வயது முதிர்ந்தவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, பொது உதவிகள், ஓய்வூதியம் என்பவற்றை அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர்கள் மற்றும் அஞ்சல்துறை அதிகாரிகளுக்கும் பெஸில் ராஜபக்ஷ இதன்போது அறிவுறுத்தியுள்ளார்

வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகளை வழங்குவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அரசாங்க அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்பை பெற்று அந்த நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளுமாறு பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.

இதேநேரம், கடன் தவணைகளை செலுத்துவதற்கு நிவாரண காலமொன்றை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

Related posts: