வீட்டில் இருந்தோரை வாளால் வெட்டி 15 பவுண் நகைகள், பணம் கொள்ளை  – சங்கானையில் நேற்று அதிகாலை அட்டகாசம்-

Friday, December 22nd, 2017

சங்கானையில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை வாளால் வெட்டியும் பொல்லுகளால் தாக்கியும் பெரும் அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டிலிருந்த 15 பவுண் தங்கநகைகள், ஒருலட்சம் ரூபா பணம் என்பவற்றைக்கொள்ளையடித்துக்கொண்டு  தப்பிச்சென்றுள்ளனர்.

சங்கானை ௲ தேவாலய வீதியில் உள்ள வீட்டில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

இந்த நேரம் வீட்டுக்குள் 6 பேர் அடங்கிய கொள்ளையர்கள் கும்பல் ஒன்று வீட்டின் முன் வாசல் கதவை உடைத்துக்கொண்டு நுளைந்தது. அவர்கள் அனைவரும் முகங்களை கறுப்புத்துணியால் மறைத்துக்கட்டியிருந்தனர்.

அனைவரது கைகளிலும் வாள்கள், பொல்லுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்தவர்களை வாளால் வெட்டி, பொல்லால் தாக்கி அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருந்த சங்கிலி, காப்பு, மோதிரம் என அனைத்து நகைகளையும் கொள்ளையர்கள் அபகரித்தனர். அத்துடன் ஒரு லட்சம் ரூபா பணத்தையும் அவர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

வாள்வெட்டு மற்றும் பொல்லுத்தாக்குதலுக்கு இலக்காகி வீட்டில் இருந்த வி.செல்வநாயகம், எஸ். பிரபாகரன் ஆகியோர் காயமடைந்தனர்.

இதேவேளை, கொள்ளையர்கள் அணிந்திருந்த 6 சோடி பாதணிகள் மற்றும் 2 சைக்கிள்கள் என்பவற்றை கொள்ளையிட்ட வீட்டிலேயே விட்டுத்தப்பியோடியுள்ளனர். பாதிக்கப்பட்ட வீட்டார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தள்ளனர். தடயப்பொருட்களையும் மீட்டுள்ள பொலிஸார், அவற்றைக்கொண்டு விசாரணைகளை முடுக்கிவிட்டனர்

Related posts: