வாள் எடுத்தால் பிணை இல்லை – நீதிபதி இளஞ்செழியன்!

Wednesday, October 19th, 2016

குடாநாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்குப் பிணை கிடையாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்,  தெரிவித்தள்ளார்.

வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்தது மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாணவன் இரத்திரனசிங்கம் செந்தூரனைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி பிணை மனு, செவ்வாய்க்கிழமை (18) மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிணை வழங்க மறுப்புத் தெரிவித்து, பிணை மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

யாழ். முலவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன், மோட்டார் சைக்கிள்களில் பகிரங்கமாக அடாவடித்தனம் புரிந்த குழுவைக் கைதுசெய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது.இதுவே, இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலைமையாகும். இந்நிலையில் இதே குற்றச்சாட்டை செய்த மாணவனுக்குப் பிணை வழங்க முடியாது.

வாள்வெட்டுச் சம்பங்களில் சம்பந்தப்பட்டிருந்தது மற்றும் கைக்குண்டு வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுக்களில் மாணவன் செந்தூரன் உள்ளிட்ட குழுவினர் கைதுசெய்யப்பட்டதையடுத்து, யாழ். குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் குறைவடைந்தன. வீதி அடாவடித்தனங்கள் குறைந்திருந்தன.

இப்போது யாழ். குடாநாட்டில் சில வன்செயல்கள் தலைதூக்கியிருக்கின்றன. இந்நிலையில் செந்தூரன் உள்ளிட்ட குழுவினரைப் பிணையில் செல்ல அனுமதித்தால், யாழ். குடாநாட்டின் அமைதி நிலைமை பாதிக்கப்படும்.

இந்த மாணவன் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்தார். அந்தக் காலகட்டத்திலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாக பொலிஸ் அறிக்கைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயினும், இவரைப் பிணையில் விட்டால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பின்மை ஏற்படும். இந்தக் குழுவினர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு.

வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் எந்த நபருக்கும் இலகுவில் பிணை கிடையாது என்ற செய்தி யாழ். குடாநாட்டில் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வலம்வர எத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும்.

எங்கள் முன்னிலையிலுள்ள பிணை வழக்கு, கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த வழக்காகும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே வழக்குகளில் பிணை வழங்க முடியும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.

இந்த மாணவன் கல்வியில் சிறப்பாகச் செயற்பட்டவர். கல்லூரி மாணவர் தலைவன். விளையாட்டில் திறமைசாலி என, அவருடைய பிணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவர் தலைமறைவாகியிருந்த போது, அவரை நீதிமன்றில் கொண்டு வந்து சரணடையச் செய்வதற்குக்கூட அவருடைய பெற்றோர் முயற்சிக்கவில்லை.

ஆனால், இவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபராகப் பெயர் பெற்றிருந்தார். இவருடைய கைது மிகவும் கடுமையான நடவடிக்கைகளில், சிரமத்தின் மத்தியிலேயே சாத்தியமானது.

இவரைப் பிணையில் விடுவதற்கு விதிவிலக்கான எந்தவித காரணமும் பிணை மனுவில் முன்வைக்கப்படவில்லை. எனவே, பிணை மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்கின்றது. குடாநாட்டில் வாள்களைக் கையில் எடுத்தால், இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

ilanseliyan-1-300x247

Related posts: