மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீது பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் – மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு!

Sunday, March 6th, 2022

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும் அவருடைய சகோதரியையும் பொலிஸார் தாக்கியதில் காயாமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த பிரதேசசபை உறுப்பினரின் தாய், தந்தை மற்றுமொறு சகோதரி ஆகியோரை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தியதை அடுத்து நீதவான் அவர்களை ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் விடுவித்துள்ளார்.

நேற்றையதினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் உறுப்பினரான பண்டத்தரிப்பை சேர்ந்த ஜோன் ஜிப்பிரிக்கோவின் வீட்டினுள் கடந்த வியாழக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளை  மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர் , ஆளும் கட்சியை சேர்ந்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை கூறி, அவரின் ஆதரவாளர் தான் என கூறி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் போது , பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் அதனை தடுக்க முற்பட்ட வேளை அவரை தள்ளி விழுத்திய பின்னர் வீட்டின் கேற்றை சேதப்படுத்தியதுடன் , வேலி தகரங்களையும் சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினரால் அன்றையதினமே இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது .

இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீதும் தந்தையார் மீதும் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் , தன்னை பிரதேச சபை உறுப்பினரின் குடும்பத்தினர் தாக்கியதாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் முறைப்பாட்டின் பிரகாரம் , பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பொலிஸார் விசாரணைக்கு அழைத்து தாக்கியதில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை , தாம் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து , பிரதேச சபை உறுப்பினரின் குடும்பத்தினரை வாக்கு மூலம் பெறுவதற்காகவே அழைத்ததாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

இதேநேரம் பிரதேச சபை உறுப்பினரின் குடும்பத்தினரின் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்ட பின்னர் பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர். வழக்கினை விசாரணை செய்த நீதவான் பிரதேச சபை உறுப்பினரின் குடும்பத்தினர் மூவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் விடுவித்தார்.

இதேவேளை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் குடும்பத்தினர் மீது இளவாலை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டார்கள் என மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் கனகராஜிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை இணைப்பாளர் ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், பொலிஸ் நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்ட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: