கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்கமாக்க நேரிடும் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Saturday, July 24th, 2021

நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக நாட்டில் டெல்டா பிறழ்வு பரவி வரும் நிலையில், மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தினார்.

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை கலாசார ரீதியில் நடத்துவதற்கு அனுமதி வழங்கும் வகையிலேயே, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

எனினும், அந்த தளர்வுகளையும் மீறி நிகழ்வுகள் நடத்தப்படுமாயின், எதிர்வரும் நாட்களில் மீண்டும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையிலும் மரணங்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்படுமாயின், கடந்த மே மாதம் போன்று இறுக்கமான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், டெல்டா பிறழ்வானது வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதன் அடிப்படையில், டெல்டா பிறழ்வு நாடு முழுவதும் பரவியுள்ளமை புலப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: