அதிகாரிகளின் கண்ணில் படாத மாற்றுத்திறனாளி!

Tuesday, November 28th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகாரிகளின் கண்ணில் படாத மாற்றுத்திறனாளி. காலொன்றினை இழந்த நிலையில் பனை மட்டை வெட்டிக் குடும்பத்தினை நடத்திவருகின்றார்.

கிளி;நொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட டி8 பெரியபரந்தனில் வசிக்கும் 67 வயதுடைய கணபதிப்பிள்ளை துரைசிங்கம் இறுதிப் போரின்போது காலில் காயமடைந்தார். பொருளாதாரப் பிரச்சினை காரணமாக காலில் காணப்பட்ட சன்னத்தை அகற்றாது இருந்துள்ளார். அதனால் 2014 ஆம் ஆண்டு அந்தக் கால் அகற்றப்பட்டது.

குறித்த வயோதிபருக்கு 5 பிள்ளைகள். ஒருவர் இறந்துள்ள நிலையில் 18 வயதுடைய கடைசி மகன் மாத்திரமே இவருடன் உள்ளார். மற்றையவர்கள் அனைவரும் திருமணம் முடித்து சென்றுள்ளனர்.

மகன் கூலி வேலைக்குப் போவதாகவும் அவரின் சம்பளம் போதாத காரணத்தால் தானும் வேலை செய்ய வேண்டிய நிலையில் பனை மட்டை வெட்டி அதனை விற்பனை செய்து வருமானம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அந்த வயோதிபரின் இரு கைகளிலும் காயம் இல்லாத இடமே இல்லை. தமக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது எனவும் சமுர்த்தி தருமாறு பல தடவைகள் கோரிய போதும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் வாழ்வாதார உதவிகள் கூடத் தமக்கு தரப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு அவை கிடைக்கும் பட்சத்தில் தான் இந்த வேலை மேற்கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

Related posts: