வீணைக்கு வழங்கும் ஆணை ஒருபோதும் வீணாகிப் போகாது – முல்லை மக்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா!
Monday, January 8th, 2018வீணைக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு ஒருபோதும் வீணாகப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா யோகபுரத்தில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் நீங்கள் யாருக்கு வாக்களித்து ஏமாந்துபோயுள்ளீர்கள். ஆனால் எமது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்திற்கு நீங்கள் ஆணை வழங்கும் பட்சத்தில் ஒருபோதும் வீணாகப் போகாது. கடந்தகால வரலாறுகளை நாம் உற்று நோக்குகின்றபோது எந்தப் பகுதி மக்கள் எமது வீணைக்கு வாக்களித்து எம்மை வெற்றிபெற வைத்தார்களோ அவர்களதும் அவர்கள் சார்ந்து வாழும் பகுதிகளையும் நாம் அபிவிருத்தியால் தூக்கிநிறுத்தியுள்ளோம்.
அந்தவகையில் நீங்கள் எமக்கு ஆணை தரும் பட்சத்தில் உங்களது வாழ்க்கையைப் பாதுகாத்து முன்னேற்றம் காணச் செய்யும் வகையில் அதற்கான செயற்றிட்டங்களை நிச்சயம் நாம் முன்னெடுப்போம். முதலில் அந்த நம்பிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் செயலாற்றவேண்டும்.
நாம் ஏனைய சக தமிழ் கட்சிகளைப்பார்க்கிலும் ஏன் மாறுபட்டவர்களாக இருக்கின்றோம் என்றால் ஏனைய சக தமிழ் கட்சிகள் மக்களாகிய உங்களது பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக வைத்துக்கொண்டு அதனூடாக தமது அரசியலை முன்னெடுக்கவே விரும்புகின்றனர்.
ஆனால் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்லர். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணவே நாம் விரும்புகின்றோம். அதுவே எமது கொள்கைத்திட்டமுமாகும்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது மட்டுமன்றி உங்களுக்கு நல்வழியைக்காட்டி அதனூடாக உங்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும் எமது நோக்கமாகும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதனிடையே இங்குள்ள குடிநீர் பிரச்சினை சுயதொழில் வாய்ப்பு சமுர்த்தி மீளாய்வு பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம் வீதிப் புனரமைப்பு உள்ளிட்ட விடயங்களில் அக்கறை செலுத்தும் அதேவேளை உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எனது கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
Related posts:
|
|