யாழ். மீன்பிடித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகவும், விரைவாகவும் தீர்வு காண்பேன். அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு
Wednesday, May 4th, 2016யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி சம்மேளனப் பிரதிநிதிகள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்துடன் இணைந்து மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களை சந்தித்து தாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்கள்.
இந்தச் சந்திப்பு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியிலநேற்று (03.05.2016) நடைபெற்றது. முன்னதாக நேற்றுக் காலை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அவரது கொழும்பு அலுவலகத்தில் சந்தித்த சம்மேளனப் பிரதிநிதிகள், தொழில் ரீதியாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தடைகள், வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் தென் இலங்கை மீனவர்களின் செயற்பாடுகள் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள், தாக்குதல்கள் தொடர்பாகவும், இறங்குதுறைகள் புனரமைப்பு, புதிய இறங்குதுறைகள் அமைப்பு, ஐஸ் தொழிற்சாலை அமையப் பெறுவதன் அவசியம், தொழில் உபகரணங்கள் வழங்கப்படுவதில் காணப்படும் முறைகேடுகள் மற்றும் மீன்பிடித் தொழில்சார்ந்த பல பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார்கள்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்தே மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காகவும், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் மீன்பிடித்துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களை சந்திப்பதற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்பாடுகளை செய்தார்.
சம்மேளனப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கவனம் எடுப்பதாகவும், உடனடியாக தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுத் தருவதாகவும், ஏனையவற்றுக்கு விரைவான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்ததோடு, அடிக்கடி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வைக் காண்பதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அக்கறை செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றைய சந்திப்பில், அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் அதிகாரி, மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்களும் கலந்து கொண்டனர். செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட வடமராட்சி கரையோரப்பகுதி அமைப்பாளர் பிரான்சிஸ் இரட்ணகுமார், கடற்தொழில்சார் பிரமுகர்கள் உட்பட சம்மேளனப் பிரதிநிதிகளுமாக, நா.வர்ணகுலசிங்கம், செ.அன்ரன் ஜெபராசா, யூ.சகாயராஜா, அ.அன்னராசா, செ.சிவஞானராசா, வே.தவச்செல்வம், அ.லூகிர்தினி, க.சூரியகுமார், வ.இ.அருள்தாஸ், எ.டின்குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Related posts:
|
|