மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கூடாக மக்கள் நலன்சார் விடயங்களுடன் அபிவிருத்திகளையும் அரசியல் உரிமையையும் எம்மால் வென்றெடுக்க முடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Sunday, October 14th, 2018மத்தியில் யார் ஆட்சிக்கு வருகின்றார்களோ அவர்களுக்கூடாக எமது மக்களின் நலன்சார்ந்த விடயங்கள் மட்டுமல்லாது அபிவிருத்திகளையும் அரசியல் உரிமையையும் எம்மால் வென்றெடுக்க முடியும் என்பதை கடந்த காலமும் நிகழ்காலமும் பதிவு செய்திருக்கின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள், பிரதேச பொறுப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களைக்கொண்டு மக்கள் நலன்சார் செயற்றிட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டுமானால் மக்கள் எமக்கான ஆதரவையும் அதிகாரத்தையும் தரவேண்டும். அவ்வாறாக மக்கள் எமக்கான அரசியல் அதிகாரத்தையும் ஆதரவையும் தருவார்களேயானால் நாம் எதனையும் எப்போதும் சாதிக்க முடியும்.
இந்த வரலாற்றை கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகள் சந்தர்ப்பங்களூடாக நாம் செயற்படுத்திக் காட்டியுள்ளோம்.
நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிலும் சரி நாடாளுமன்ற தேர்தலிலும் சரி மக்கள் சரியானவர்களை தெரிவுசெய்து கொள்ளாததன் விளைவுகளை மக்கள் தற்போது உணர்ந்து வருகின்றார்கள் என்பது நிதர்சனமானது.
கடந்த காலங்களில் உசுப்பேற்றல் அரசியலை முன்னெடுத்தவர்கள் இதுவரையில் மக்களுக்காக எதனைச் செய்துள்ளார்கள் என்பது தொடர்பிலே இப்போது மக்களுக்கு நன்கு பலப்பட்டுள்ளது.
அது பிரதேச சபைகளாக இருக்கட்டும் வடக்கு மாகாணசபையாக இருக்கட்டும் எதுவாக இருப்பினும் அவைகள் சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை என்பதே வெளிப்படையான விடயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|