முற்கூட்டிய திட்டமிடல்கள் இருந்திருந்தால் அழிவுகளிலிருந்து மக்களை ஓரளவேனும் பாதுகாத்திருக்க முடியும் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
Tuesday, December 25th, 2018கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.
இதன்போது அதிகூடியதான மழை வீழ்ச்சி ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாவட்டத்தில் குறிப்பாக தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களது பாதுகாப்பு பற்றி முற்கூட்டியே எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அதனடிப்படையில் சரியான திட்டமிடல் மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகளை துறைசார்ந்தவர்கள் விரைவுபடுத்த தவறியமை கூட இந்த அனர்த்தங்களுக்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக இரணைமடு நீர்த்தேக்கத்தில் நீரின் மட்டம் சடுதியாக உயர்ந்ததை அடுத்து வான்கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் அதன் தாக்கத்தினால் அல்லது பாதிப்புக்களினால் மக்கள் எதிர்கொள்ளக்கூடிய இடர்பாடுகளை கருத்திற்கொண்டு குறித்த தாழ்நிலப் பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக துறைசார்ந்தவர்கள் வெளியேற்றியிருக்க வேண்டும். அது போன்று மக்களது கால்நடைகளையும் உரிய காலப்பகுதியில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். மாறாக இவை அனைத்தும் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாத காரணத்தினாலேயே இந்த அனர்த்தங்களின் பாதிப்பு வெகுவாகவுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாத வகையில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி ஓரிரு தினங்களில் உரிய தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தக் கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், உள்ளிட்ட துறைசார்ந்தவர்கள் உடனிருந்தனர்.
Related posts:
|
|