மக்களின் நலன்களை வென்றெடுக்க ஒன்றுபட்டு உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Friday, June 26th, 2020
எமது மக்களுக்கு எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை கொடுத்து அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்று அரசியலுரிமையுடன் வறுமையற்ற ஒளிமயமான சமூகத்தை கட்டியெழுப்பக் கூடியதான மனதைரியத்தை வழங்கும் வகையில் ஒவ்வொரு செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் யாழ் – கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் கட்சியின் நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக மற்றும் உதவி நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
நாம் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை கடந்தகாலங்களில் செயல்வடிவில் காட்டியுள்ளோம். அந்தவகையில் கடந்தகால அனுபவங்களையும் படிப்பினைகளையும் வைத்துக்கொண்டு எதிர்காலத்தை நம்பிக்கையுடன் முன்கொண்டு செல்வதற்கு நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணவேண்டும்.
அதற்கான சூழல்களை நாம் உருவாக்குகின்ற அதேவேளை உருவாகுகின்ற சூழல்களையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
உழைப்பு, தற்துணிவு, அர்ப்பணம், ஆகியவற்றை அடிப்படையாக வைத்துக்கொண்டே நாம் மக்களுக்கான சேவைகளை இயன்றளவில் செய்துவருகின்றோம். கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எத்தனையோ இடர்பாடுகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு அந்தந்தக் காலத்தில் அந்தந்த அரசுகளுடன் மேற்கொண்டுவந்த ஒர் இணக்க அரசியலினூடாக கட்சி சார்ந்து நாம் பல்வேறுபட்ட பணிகளை முன்னெடுத்திருந்தோம்.
எனவே எமது மக்களுக்கு எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை கொடுத்து அவர்களுக்கு வழியைக்காட்டும் பொறுப்பை ஏற்று அதற்கேற்றவகையில் வறுமையற்ற ஒளிமயமான சமூகத்தை கட்டியெழுப்பக் கூடியதான மனதைரியத்தை அவர்களுக்கு வழங்கும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|



