கச்சதீவை வழங்கினால் பிரச்சினை ஒன்றும் தீரப் போவதில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, April 12th, 2024

சீனாவை விட இந்தியா முதன்மையானது என்றாலும் இந்தியா கோருகின்றது என்பதற்காக கச்சதீவைவழங்கினால் பிரச்சினை ஒன்றும் தீரப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் நேற்று (11.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் சீனாவை விட இந்தியாவின் உறவை விரும்பும் நிலையில் கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கினால் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டும் பிரச்சினை தீரப் போவதில்லை.

ஒருவேளை கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கி விட்டால் இந்தியா மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்கள் அதன் எல்லையில் இருந்து ஒரு கடல் மைல் எல்லைக்கு அப்பால் சென்று கடற்றொழிலில் ஈடுபட முடியாது.

கச்சதீவில் 1974 ஆம் ஆண்டு தொடக்கம் இருநாட்டு கடற்றொழிலாளர்களும் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபடும் இடமாக காணப்பட்ட நிலையில் 1976 ஆம் ஆண்டு இரு நாடுகளும் இணைந்து செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையிடம் கச்சதீவு ஒப்படைக்கப்பட்டது.

கச்சதீவை இலங்கை பெற்றதால் கச்சதீவு போல் வளமான 80 மடங்கு கடலை இந்தியாவுக்கு தாரை வார்த்து விட்டோம். எனினும், தீவகப் பகுதிகளில் இந்தியாவின் மீள் புதுப்பிக்க சக்தி திட்டம் வர இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீனாவின் திட்டம் என்றால் எதிர்ப்பு வருவது ஏன் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு “முதலில் தீவகத்தில் மீள் புதுப்பிக்க சக்தி திட்டத்தை சீனா தமக்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தது. நான் அமைச்சரவையில் அதனை மறுத்து இந்தியாவுக்கு வழங்குங்கள் என கோரிக்கை விடுத்தேன்.

நான் அவ்வாறு கோரிக்கை முன்வைத்ததற்கான காரணம் என்னவெனில் எமக்கு கிடைக்கின்ற அபிவிருத்தி திட்டங்களை தடுக்காது அதனை மக்கள் அபிவிருத்தி ஆக்குவதே எனது நோக்கம்.

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் சீனாவைக் காட்டிலும் இந்தியாவின் திட்டங்களை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

இலங்கை – இந்திய உறவுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவு நம்பிக்கையானது. அதன் காரணமாகவே எல்லை தாண்டும் கடற்றொழிலாளர் பிரச்சினையையும் பேசி தீர்ப்பதற்காக புதுச்சேரி மாநில முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

அங்கு தேர்தல் இடம்பெற உள்ளதால் தற்போது செல்வதற்கான ஏற்பாடுகள் இல்லை தேர்தல் முடிவுகளில் அரசாங்கம் ஒன்று அமைந்ததன் பின்னர் பேசலாம் என எண்ணியுள்ளேன்.

எனவே, கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கினால் பிரச்சினை தீர்ந்து விடும் என நினைப்பது தவறு. இந்த விடயம் இராஜதந்திர ரீதியில் தீர்க்க வேண்டிய விடயம்” என அவர் தெரிவித்துள்ளமைகு.

000

Related posts:

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் உரிமைகள் பெறுவதற்கான எமது மக்களின் துணிவின் ஆரம்பம் - டக்ளஸ் தேவானந...
நிமிர்ந்தெழும் காலத்தை வெல்ல நிரந்தர ஒளியேற்றுவோம்! தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!
வடக்கின் வீடற்ற மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் - முயற்சிகள் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவ...