பொருளாதார ரீதியான அபிவிருத்தி சகல மட்டங்களுக்கும் பரவ வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் எதிர்பார்ப்பு!

Monday, May 17th, 2021

பொருளாதார ரீதியான எமது மக்களின் அபிவிருத்தி என்பது சகல பிரதேசங்களுக்கும் – அனைத்து தரப்பினருக்கும் ஆறுபோல் பரவ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கரணவாய் மண்டான் நீர் ஏரியில் இன்று (17.05.2021) இறால் அறுவடையை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் …

பொருளாதாரத்தில் எமது மக்கள் அபிவிருத்தியடைந்து வருவது இங்கு மட்டுமல்ல இந்த நாட்டில் வாழும் சகல மக்களினதும் வாழ்விடங்கள் தோறும் ஆறுபோல் பாய்ந்து பரவவேண்டும் என்பதுடன் மக்களின் வாழ்வும் வளமும் எழுச்சியும் பெறவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களது ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கை வழி அடிப்படையில் எமது கடற்றொழில் அமைச்சினது செயற்திட்டங்களை நாம் முழுமையாக முன்னெடுத்து வரும் இக் காலகட்டத்தில், உலகமயத் தொற்று அனர்த்தமான கொவிட் 19 அலை எமது நாட்டு மக்களையும் பாதித்து வருகின்றது,

அதற்காக நாம் முடங்கியிருக்க முடியாது அந்த வகையில் எமது மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக எமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி எமது தாயகப் பிரதேசத்திலிருக்கும் வளங்களை அடையாளங்கண்டு, சுய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டும்.

நாளைய எதிர்காலத்தில் எமது இளைய சந்ததியினர் இந்த மண்ணில் தலைநிமிர்ந்து வாழும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்பதுடன் அந்த வாழ்வியலை அமைத்து கொடுக்க வேண்டிய பாரிய கடப்பாட்டை இந்த வரலாற்றுப் பாதை என்மீது சுமத்தியுள்ளது.

என்மீது சுமத்தப்பட்டுள்ளகடப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்ற ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி கடற்றொழில் அமைச்சரினால் மண்டான் பிரதேசத்தில் இறால் குஞ்சுகள் விடப்பட்ட நிலையில், அவை தற்போது அறுவடைக்கு தயாரகியுள்ளன.

இந்நிலையில், அவற்றின் அறுவடை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் இன்று, கொறோனா தொடர்பான சுகாதார நடைமுறைகளுடன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில், கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பார் ஜெ. சுதாகரன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்மூலம், குறித்த நீர்நிலையை வாழ்வாதாரமாக நம்பி வாழும் சுமார் 270 குடும்பங்களை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த நிகழ்வின்போது  அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்த கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வடமராட்சி தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் வடமராட்சி பிரதேச நிர்வாக பொறுப்பாளர்கள் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் உடனிருந்தனர் .

Related posts: