போராடும் மக்களுக்கு உரியநீதி வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 17th, 2017

சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை உறுதிசெய்ய இலங்கை அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி ரீடா இசாக் தெரிவித்துள்ளதானது இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை உறுதிசெய்வதில் காணப்படுகின்ற குறைபாட்டையே காட்டுகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

ரீட்டா இசாக் அம்மையாரின் அந்த அறிக்கையில், நாட்டின் சிறுபான்மை சமூகத்தை பாதுகாப்பதற்கான மெய்யான அபிலபஷைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளதுடன், காணாமல் போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, கைதுகள், சிவில் செயற்பாடுகளிலிருந்து இராணுவம் முழுமையாக விடுபடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அரசாங்கம் அதிககரிசனை காட்டவேண்டு மெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தமில்லாத தற்போதைய நிலையிலும் தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன? நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்கான நியாயமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும், தாம் பூர்விகமாக வாழ்ந்தகாணி, நிலங்களை மீளவும் தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளான தமது உறவுகளுக்கு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை வேண்டும் என்றும் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்ற போதும் அவர்களுக்கு உரியபதில் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, அரசுடன் இணைக்க அரசியல் நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும், பங்காளிக்கட்சிகளும், எமது மக்களின் கோரிக்கைகளுக் குஉரியதீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வராமலிருப்பது கண்டனத்துக் குரியதாகும்.

எமதுமக்கள் பல நாட்களாக வீதியில் இறங்கி தமக்கு நியாயம் கிடைக்கவேண்டிப் போராடி வருகின்றார்கள். அவர்களின் போராட்டத்தை புறக்கணிக்காமல், தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அர்த்தபூர்வமான முயற்சிகளை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும்.

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், கொடுத்த வாக்குறுதிகளையும், மக்களையும் மறந்து பதவிகளோடு ஒதுங்கிக் கொண்டுள்ள நிலையில் கூட்டமைப்பை நம்பி வாக்களித்து ஏமாந்து போன தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடி தாமே வீதியில் இறங்கிப் போராடும் போது, அரசோடு இணக்க அரசியல் நடத்துவோர் என்ன செய்கின்றார்கள்? என்ற கேள்விக்கு தமிழ்மக்கள் பதில் தேடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts: