புலிபாய்ந்த கல் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எந்தவித சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்க கூடாதென அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!
Wednesday, February 28th, 2024முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஆற்றல் மிக்க பணிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளதாக தெரிவித்தள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் எந்தவிதமான சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடங்கொடுக்க கூடாதெனவும் அவரிடம் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றையதினம் (28.02.2024) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்த நிலையில் கொக்குத்தொடுவாய் வடக்கு புலிபாய்ந்த கல் பகுதிக்கும் மக்களின் கோரிக்கைக்கிணங்க கள விஜயம் சென்றிருந்தார்.
இந்தக் கள விஜயத்தின்போது குறித்த பகுதி மக்களினதும் பிரதேசத்தினதும் பல்வேறு பிரச்சனைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இந்நிலையில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே புலிபாய்ந்தகல் பகுதியில் அண்மைக்காலமாக உரிய அனுமதிகள் ஏதுமின்றி தென்பகுதியில் இருந்து மீனவர்கள் வருகை தந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் இதனால் குறித்த பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கும் அத்துமீறி வாடியமைத்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் தென்பகுதி மீனவர்களுக்கும் முறுகல் நிலை தோன்றும் நிலையும் உருவாகியிருந்தது..
இந்நிலையில், குறித்த பகுதியை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர், அப்பகுதியில் அத்துமீறி வாடியமைத்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட யாருக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் கொக்குத்தொடுவாய் வடக்கு புலிபாய்ந்த கல் பகுதி மக்கள் தமது காணி உரிம பிரச்சினை தொடர்பிலும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தனர். அது தொடர்பிலும் ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|