நிமிர்ந்தெழும் காலத்தை வெல்ல நிரந்தர ஒளியேற்றுவோம்! தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, October 18th, 2017
இல்லாமையில் இருந்தும் வறுமையில் இருந்தும் விடுபட்டு உயரிய வாழ்வின் மகிழ்ச்சியை எல்லா மக்களும் அனுபவிக்க இன்றை தீபாவளி திருநாள் அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டடுள்ளதாவது –
எம் இனிய தமிழ் பேசும் மக்களே!…
உங்களுக்கு வணக்கம்!….
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும்.
இந்த நம்பிக்கையினை மக்களின் மனங்களில்
விதை விதைத்த ஒரு திருநாளே தீபாவளி திருநாள்.
இருட்டை கிழித்து வெளிக்கிளம்பும் சூரியன் போல்
எமது வரலாற்று வாழ்விடங்களிலும் மாற்றங்கள் நிகழ வேண்டும்.
நிரந்தர தீப ஒளிகள் உங்கள் இல்லங்கள் தோறும் ஏற்றப்பட வேண்டும். இருள் அகல வேண்டும்.
விரும்பும் வாழ்வு திரும்ப வேண்டும். புதிய காலம் அரும்ப வேண்டும்.
ஒளி மயமான எதிர்காலம் ஒன்று உருவாக வேண்டும்.
இவைகளே உங்களதும் எங்களதும் ஆழ்மன விருப்பங்களாகும்.
நீங்கள் வலிகளையும் வதைகளையும் வாழ்வெங்கும்
துயரச்சுமைகளாக சுமந்து வந்தவர்கள்.
நீங்கள் சுமந்த துயர்களுக்கும். உங்கள் துயர்களை துடைக்க
எழுந்து வந்து நாம் ஆற்றிய அர்ப்பணங்களுக்கும் உரியதான
வெகுமதிகளும் விமோசனங்களும் முழுமையாக கிடைக்க வேண்டும்.
நாம் ஒரு தேசிய இனம். எமது மண்ணில் சுதிந்திர பிரஜைகளாக
நாம் தலை நிமிர்ந்து வாழக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு மலர வேண்டும்.
இன்னமும் மீண்டு வராத அரசியல் கைதிகள் விரைவாக விடுதலையாகி வர வேண்டும்…
இதுவரை மீட்கப்படாத எமது மக்களின் சொந்த நிலங்கள்
மீட்கப்பட வேண்டும். எமது நிலங்கள் எமக்கே சொந்தம் என்ற
உரிமை எமக்கு வேண்டும்.
இல்லாமையில் இருந்தும் வறுமையில் இருந்தும் விடுபட்டு
உயரிய வாழ்வின் மகிழ்ச்சியை எல்லா மக்களும் அனுபவிக்க வேண்டும்.
இந்த இலட்சியக்கனவுகள் நிறைவேறும் காலமே
எமது மண்ணில் நிரந்த ஒளி வீசும் காலமாகும்.
சூழ்ந்து வரும் சூழ்சிகளை வென்று சரிந்து கிடக்கும் எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை மேலும் தூக்கி நிறுத்திட…
மாற்றங்கள் நிகழவேண்டிய அரிய இத்தருணங்களில் இன்னமும் மாறாதிருக்கும் அரசியல் மாற்றங்களை உருவாக்கிட…
நாம் உறுதி கொண்டு உழைப்போம் என்ற நம்பிக்கையோடு
பிறந்து வரும் தீபாவளி திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்.
மாய மான்களை பின் தொடர்ந்து ஓடுவதால் மாற்றங்கள் நிகழாது
மாறாக தொடர்ந்தும் ஏமாற்றங்களே நிகழும்!
இதை உணர்ந்த நீங்கள் இலட்சியத் தேரின் வடம் பிடிக்க
இன்று எம்மை நோக்கி அணிதிரண்டு வருவதையிட்டு
நான் அகமகிழ்வோடு வரவேற்கிறேன்!
அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!.
மத்தியில் கூட்டாட்சி!… மாநிலத்தில் சுயாட்சி!!
நாம் செல்லும்…. பயணம் வெல்லும்!
மக்களுக்காக நாம்….. மக்களுடன் நாம்……
நன்றி!
Related posts:
|
|