நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டமை நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

Tuesday, November 3rd, 2020

அரசியலமைப்பின் இருபதாம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியாக கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படுவது தொடர்பாக இன்று நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் சமர்ப்பித்துள்ளார்

முன்பதாக நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக தனது நியமனமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார் என கடந்த 29.10.2020 திகதியன்று பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும்.

சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த நாடாளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பார்கள்.

அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியாக கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படுவது தொடர்பாக இன்று நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: