தேசிய நல்லிணக்க உருவாக்கத்தில் இரு மொழிக்கொள்கை அமுலாக்கம் அவசியமாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Thursday, December 1st, 2016
தேசிய நல்லிணக்க உருவாக்கத்திற்காக பல தேசியத் திட்டங்களை நாம் உருவாக்க வேண்டிய அவசியங்களும் உள்ளன. குறிப்பாக, தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியைக் கற்கக் கூடிய வகையிலும், சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்கக்கூடிய வகையிலும் எமது கல்வித் திட்டத்தில் தேசியக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் எனது கருத்துக்களை முன்வைது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
மேலும், இரு மொழித் தேர்ச்சி பற்றிய அரச ஊழியர்களுக்கான ஒரு தேசியக் கொள்கை அவசியமாகும். தற்போதுகூட இந்த இரு மொழித் தேர்ச்சிக்காக கனடா அரசு பாரிய நிதியினை வழங்குகின்ற போதிலும், தமிழ்மொழி தெரியாத அரச ஊழியர்கள் – தமிழ்மொழி பற்றிய அறிவின்மையை கொண்டிருக்கின்ற நிலையில் அந்த நிதி உதவியினால் பலனடைகின்றனரே அன்றி, தமிழ் மொழியைக் கற்பதற்கு ஆர்வம் காட்டுவதாக இல்லை எனத் தெரிய வருகிறது.
எனவே, தேசிய நல்லிணக்க உருவாக்கத்தில் இந்த மொழிக்கொள்கை அமுலாக்கம் என்பது அடிப்படைத் தேவையாகும். இது தொடர்பில் கடந்த காலங்களில் 23 சுற்றறிக்கைகள் விடுக்கப்பட்டும் அதில் எந்தவொரு முன்னேற்றமும் நடைமுறையில் காணப்படாத நிலையே காணப்படுகின்றது.
அத்துடன் எமது பாடசாலை பாட நூல்களில் தமிழ் – முஸ்லிம் மக்களது இந்த நாட்டுடன் பிணைந்த வரலாறுகளும் இடம்பெற வேண்டும். அத்துடன், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பக் கூடியதான பாடத்திட்டங்கள் இரு மொழிப் பாட நூல்களிலும் உள்ளடக்கப்பட வேண்டும்.
அரச பணியாளர்களை எடுத்துக் கொண்டால் தற்போதைய நிலையில் சுமார் 5–6 வீதத்தினரே தமிழ்; மொழி மூலமான பணியாளர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் தென்பகுதியில் அரசியல் தலையீடுகள் காரணமாக மேலும் பலர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டு, தெற்கில் அதற்குரிய ஆளணி வெற்றிடங்கள் இல்லாத நிலையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இவ்வாறு அனுப்பப்படுவோரால் மொழி பற்றிய தெளிவின்மைகள் காரணமாக மக்கள் சேவைகள் பாதிக்கப்படும் நிலையும், எமது பகுதிகளிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு அந்த வேலை வாய்ப்புகள் கிட்டாத நிலையுமே உருவாகின்றன. எனவே, இவ்வாறான நிலைமைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என நான் இந்த சபையில் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|