ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் கிளி. மாவட்ட உயரதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்! உரிய நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு!

Wednesday, June 2nd, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் MAS Holdings இன் விடியல் மற்றும் வானவில் ஆடைத்தொழிற்சாலைகளால் கொறோணா தொற்று பரவல் அதிகரிப்பதாகக் கூறப்பட்டுவரும் விடயம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட உயரதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடாலை இன்று மாலை நடாத்தினார்.

மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்டப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன், இணைத்தலைவரின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன், மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோரடன் குழு தொலைபேசி தொடர்பாடல் மூலம் இந்தக் கலந்துரையாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடாத்தினார்.

இதன்போது, ஆடைத்தொழிற்சாலையின் தற்போதைய கொவிட்-19 தொற்று நிலவரம் தொடர்பில் வைத்திய கலாநிதி சரவணபவன் அமைச்சருக்கு விளக்கிக் கூறினார்.

விடியல் தொழிற்சாலையிலேயே இதுவரையில் அதிகளவானோர் கொவிட்-19 தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், இதுவரையில் 172 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டிருப்பதுடன், 400 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இரண்டு பணி நேரமாக சுழற்முறையில் நடாத்தப்பட்டுவரும் தொழிற்சாலைப் பணிகளில், ஒரு பணிநேரத்தில் வேலைசெய்தவர்கள் மத்தியிலேயே அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகத் தெரிவத்த அவர், மற்றைய பணிநேரத்தில் பணியாற்றியவர்கள் ஓரளவுக்கு சுமுகமாகப் பணியைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இறுதியாகச் செய்யப்பட்ட தொற்றுப் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை என்றும், ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்கள் மூலம் சமூக மட்டத்தில் தொற்றுப் பரவல் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் விளக்கினார்.

ஆடைத்தொழிற்சாலையை மூடவேண்டும் என்று முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினவியபோது பதிலளித்த மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன்,

இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், எந்தவொரு தொழிற்சாலை நடவடிக்கைகளையும் இடைநிறுத்தவேண்டாம் என்று பணிக்கப்பட்டதாகவும், நோய்த்தொற்றுள்ளவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்றுப் பரவல் தொடராமல் தொழிற்சாலைகளின் பணிகளைத் தொடருமாறு அவர் ஆலோசனை கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேபோல், ஆடைத்தொழிற்சாலைத் தொற்றாளர்களால் பயணத்தடை கடுமையாக்கப்பட்ட சாந்தபுரம் கிராமத்து மக்களின் பிரச்சினைகள் குறித்து இணைப்பாளர் வை.தவநாதன் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றதுடன், கிளிநொச்சி மாவட்டத்திலேயே தங்கியிருந்து தொழில்களில் ஈடுபடுவோருக்கு வசதியாக உணவகமொன்றைத் திறந்து செயற்பட ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன்தள பணியாளர்களர்களுக்கு தடுப்பூசி வழங்கலின்போது முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும் தவநாதன் வேண்டுகொள் விடுத்தார்.

இதனையடுத்து. அம்மாச்சி உணவகத்தை அதற்கேற்ற வகையில் உணவை எடுத்துச்சென்று உண்ணும் ஏற்பாட்டுடன் செயற்பட ஒழுங்குசெய்யுமாறு மாவட்டச் செயலாளர் றூபதி கேதீஸ்வரனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டதுடன், தடுப்பூசி வழங்கல் விரைவில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

Related posts:


காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதனூடாக வடக்கில் தொழிவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் ...
தமிழ் மொழி பாடநூல்களில் காணப்படும் தவறுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படாதிருக்கிறது - டக்ளஸ் எம்.பி....
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு – பிரதேச அபிவிருத்தி கு...