தேசிய அரசியல் நீரோட்டத்தை எமது மக்களுக்காக பயன்படுத்துவதில் வெற்றி கண்டவர்கள் நாம் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 25th, 2016

தேசிய அரசியல் நீரோட்டத்தை எமது மக்களுக்காக பயன்படுத்தியதில் வெற்றிகண்டவர்கள் நாம். மாறாக தேசியம் என்று வெட்டிப் பேச்சுக்களைப் பேசி கனிந்துவரும் சந்தர்ப்பங்களை தடுத்து நிறுத்தி மக்களை வெறுவிலிகளாக்குபவர்களாக நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பச்சிலைப்பள்ளி மாசார் கிராம மக்களது அழைப்பின்பேரில்  குறித்த பகுதிக்கு விஜயம் செய்து மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்டு மக்களது பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

1

நாம் மக்களை உசுப்பேற்றி அதனூடாக சுகபோகங்களை அனுபவிக்கும் அரசியலை ஒருபோதும் மேற்கொண்டது கிடையாது. கடந்த காலங்களில் எமத மக்கள் கண்டவந்த துயர்களையும் மாறா வடுக்களையும் பாடங்களாக வைத்து ஒரு எதிர்கால தூரநோக்கம் கொண்ட அரசியலை மேற்கொண்டுவருகின்றோம். இதனால்தான் நாம் முன்னெடுத்துச் சென்ற மதிநுட்பம் கொண்ட அரசியல் வழிமுறை என்றும் சாத்தியமானதாக காணப்படுகின்றது

மக்கள் நலன்கள்மீதும் எமது உரிமை சார் அரசியல்தீர்வு மீதும் அதிக அக்கறைகொண்ட எமது அணுகுமுறைகளால்தான் மாற்றுத் தமிழ் அரசியல் தரப்பினர் காலத்திற்கு காலம் எமது கட்சி மீது அவதூறுகளையும் பொய்ப் பிரச்சாரகளையும் திட்டமிட்ட வகையில் பரப்பி தமது அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக் கொள்கின்றனர்.

3

தோழர் பிடல் காஸ்ரோ கூறியது போன்று வரலாறு நிச்சயம் எங்களை விடுதலை செய்து வருகின்றது. நாம் ஒருபோதும் பழிவாங்கும் அரசியலை முன்னெடுத்தவர்கள் அல்ல. அதனால் தான் கருத்தை கருத்தால் எதிர்கொண்டு வருகின்றோம்.

அதுமட்டுமல்ல எமது கட்சிக்கென்று ஒரு வரலாறு உண்டு. அத்துடன் தெளிவான கொள்கையும் இலக்கும் வகுத்து எமது ஜனநாயக வழிமுறை பயணத்தில் எமது தோழர்கள் கொடுத்த  அர்ப்பணங்களையும் தியாகங்களையும் நினைவில் நிறுத்தி இலட்சியப் பயணத்தை நாம் நம்பிக்கையுடன் முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும் உங்களது வாழ்க்கை வளமாகுவதற்கான பாதை உங்களிடமே உள்ளது. கடந்த காலங்களில் உங்களது தவறான அரசியல் தெரிவுகளால்தான் இன்றுவரை அழுகுரல்களும் அவலங்களும் வாழ்வில் மறையாதிருப்பதற்கு காரணம். எமது கரங்களுக்கு உங்களது அரசியல் ஆதரவை பலமாக தருவீர்களானால் நிச்சமாக நீங்கள் கண்ட கனவுகள் அனைத்தைம் நாம் மெய்ப்பித்து காட்டுவோம் என்றார்.

2

இச்சந்திப்பின் போது குறித்த பகுதி மக்கள் தமது குடியிருப்பு காணிகள் உரிம பத்திர விடயங்கள், தொழில் வாய்ப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக தாம் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கைவிடுத்தனர்.

மக்களது கோரிக்கைகளை கருத்திற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளூடாக தீர்வகளை பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் இரத்தினம் அமீன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதேசங்களின் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்தகொண்டனர்.

Related posts: