தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, January 4th, 2021

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் எழுதப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் இன்று(04.01.2021) கலந்துரையாடப்பட்ட போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வீட்டுத் தோட்டப் போட்டியில் வெற்றி பெற்றவவர்களுக்கான சான்றிதழ்கள், பிரதேச மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் தயாரிக்கப்பட்டு விரைவில் அனுப்பி வைக்கப்படும் எனவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெற்றியாளர்களுக்கான, சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில், சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் அச்சசிடப்பட்டிருந்தமையினால் எழுதப்பட்டிருந்த விடயங்களை புரிந்து கொள்ள முடியாத இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரிகளுக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்புச் செயலாளர்களான வை. தவநாதன் மற்றம் கோ. ருஷாங்கன் ஆகியோரின் கவனத்திற்கும் குறித்த விடயம் கொண்டு வரப்பட்ட நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இதுதொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்திலும் தமிழ் மொழி முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு முழுமையான வாழ்வாதார ஏற்பாடு வேண்டும் - நாடாளுமன்றில் ட...
ஈ.பி.டி.பியின் வடமாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்த...
இந்திய வெளிவிவகார அமைச்சர் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சந்திப்பு – வடக்கின் பல்வேறு...

ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்க...
தமிழ் மக்களின் தற்போதைய போக்கு கடவுள் வந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாத நிலையை உருவாக்கும்- அமைச்ச...
நம்பிக்கையோடு அணுகுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!