கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும்- டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, September 20th, 2016

கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும் தான் என சில தினங்களுக்கு முன்னர் தீயில் கரிகிப்போன கிளிநொச்சி சந்தை தொடர்பாக தனது முகநூலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பதிவிட்டுள்ளார். குறித்த பதிவை எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடகின்றோம்.

கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும்தான். கிளிநொச்சியில் பொதுவான சந்தைக் கட்டிடத் தொகுதி அமைக்கப்பட வேண்டுமென யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாத்தகர்களும், விவசாயப் பெருமக்களும் எங்களிடம் கோரிக்கையை முன்வைத்தபோது நாமும் சந்தைத் தொகுதியை கிளிநொச்சியில் அமைப்பதற்கு முன்னைய ஆட்சியாளர்களுடன் பேச்சுக்களை நடத்தினோம்.

அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது சந்தைத் தொகுதி அமைக்கும் திட்டத்தை குழப்பும் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். ஒருவேளை கூட்டமைப்பினரின் குழப்பங்களுக்கு எடுபட்டு அன்று நாம் சந்தை அமைக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டிருந்தால், இன்று வவுனியா பொருளாதார வர்த்தக மையத்தை எங்கே அமைப்பது என்பதை தீர்மானிக்க முடியாமல் தமக்குள் இழுபறிபட்டுக்கொண்டு அந்தத் திட்டத்தையே குழப்பி விட்டிருப்பதைப்போல் அன்று கிளிநொச்சி சந்தைத் தொகுதியை அமைக்கும் எமது திட்டத்தையும் தடுத்து நிறுத்தியிருப்பார்கள் .

14333114_1583450828618009_4125496007843924519_n - Copy

கூட்டமைப்பினர் ஏற்படுத்திய பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் நிரந்தரமான சந்தைத் தொகுதியை கிளிநொச்சியில் நாம் அமைத்தபோதும் மேலும் சிலருக்கு கடை தொகுதிகளை ஒதுக்குவதற்கு இட வசதி போதாமையால் பாதிக்கப்பட்ட எஞ்சிய வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைவாகவே மேலும் ஒரு தொகுதி கடைகளை நிரந்தரமாகக் கட்ட வேண்டும் என்று நாம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அதற்கும் கூட்டமைப்பினர் கடுமையான எதிர்ப்புக்களைக் காட்டினார்கள்.

வர்த்தக சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைவாகவே தற்காலிகமாக ஒரு கடைத் தொகுதியை அமைத்து முதலில் வர்த்தக நிலையங்களை நடத்தியவர்களுக்கும், யுத்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கியிருந்தோம் அந்த தற்காலிக கடை தொகுதிதான் இப்போது தீப் பிடித்து எரிந்துள்ளது.

14364682_1583450745284684_5577751004499302420_n - Copy

கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைவாகவே கேள்விப் பத்திர அறிவிப்புச் செய்யாமலே நிரந்தர கடைத் தொகுதியையும், தற்காலிக கடைத் தொகுதியையும் கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்து கொடுத்தோம்.

கேள்விப் பத்திரம் கோரி கடைகளை பகிர்ந்திருந்தால் வெளியாரும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு புறம்பானவர்களும் கடைத் தொகுதியைப் பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் அந்தக் கடைகளை கேள்விப்பத்திர முறையில் பெற்றுக்கொள்ளவும் முடியாமலிருந்திருக்கும். பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் அதிகமான நிதியை செலவு செய்யும் நிலையும் ஏற்பட்டிருக்கும் அது கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பெருமக்களையும், வர்த்தகர்களையும் பாதிக்கும் என்றும் முடிவு செய்தோம்.

தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகளை நிரந்தரமாக சந்தைக் கட்டிடத் தொகுதியாக அமைக்கும் எமது முயற்சிகளுக்கு இடையே வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் மாகாணசபை அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்ட கூட்டமைப்பினர் எமது முயற்சிகளுக்கு மேலும் தடையை ஏற்படுத்தினார்கள்.

14433062_1583450788618013_6422342364533254422_n - Copy

சில காலம் இந்த இழுபறி தொடர்ந்தது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் எமது முயற்சிகளுக்கு கூட்டமைப்பினர் நிரந்தரத் தடையையும் ஏற்படுத்தி கிளிநொச்சி வர்த்தகர்களும், விவசாய உற்பத்தியாளர்களுக்கும் பெருந்துரோகத்தைச் செய்தார்கள்.

ஒருவேளை நாங்கள் இந்த சந்தைக் கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ள நிலத்தை அன்று பெற்றுக்கொண்டிருக்காவிட்டால் இப்போதும் அந்த நிலம் எமது மக்களுக்கு பயனுள்ளதாக கிடைத்திருக்காது.

துரதிஷ்ட்டவசமாக இப்போது தற்காலிக சந்தைத் தொகுதி தீப்பிடித்து எரிந்துவிட்டது. அதில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு யானைப் பசிக்கு சோளப்பொரி வழங்கியதுபோல், தலா 20,000 ரூபாய் வழங்குவதாக வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் கூறியிருக்கின்றார்.

தீ பரவலினால் தொழில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு உரிய நட்ட ஈடுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். நிரந்தரமாக அதே இடத்தில் சந்தைத் தொகுதி விரைவாக அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும். அதுவரை தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக வர்த்தகத்தை தொடர்வதற்கு தற்காலிக ஏற்பாடுகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் வர்த்தகர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியை இரத்துச் செய்து கடன் சுமையிலிருந்து வர்த்தகர்களை பாதுகாக்க விஷேட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

14355080_1583450798618012_5366514563135122803_n - Copy

வர்த்தககர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் ஆளுமை இன்மையையும், இயலாமையையும் மறைப்பதற்காகவே பொறுப்பற்ற பதில்களை வடக்கின் முதலமைச்சர் வழங்கியிருக்கின்றார்.

கிளிநொச்சியில் தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்த தீயணைப்பு வசதி இல்லாத காரணத்தினாலே தீயைக்கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தீ அணைப்பு வசதி இருந்திருந்தால் பெருமளவான வர்த்தக நிலையங்களையாவது பாதுகாத்திருக்கலாம் என்று வர்த்தகர்கள் கூறுகின்றார்கள்.

மாகாணசபையை பொறுப்பேற்று மூன்று வருடங்களாகிவிட்ட போதும், வடக்கு மக்களுக்கு பயனற்றதும், அர்த்தமற்றதுமான 300க்கும் அதிகமான தீர்மானங்களை மட்டுமே ஏட்டிக்குப் போட்டியாக நிறைவேற்றியிருக்கின்றார்களே தவிர ஆக்கபூர்வமாக எதையும் செய்ததில்லை.

வருடாந்தம் வட மாகாணத்திற்கு மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியைக்கூட முறையாக பயன்படுத்தத் தெரியாமல் வடக்கு மாகாணசபை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கின்றது.

14344700_1583450748618017_3191545235694712813_n - Copy

யாழ்ப்பாண மாநகர சபையை நாம் ஆளும் தரப்பாக பொறுப்பேற்றபோது கடுமையாக முயற்சி செய்து ஒரு தீ அணைப்புப் படைப்பிரிவையே ஏற்படுத்தியிருக்கின்றோம்.

மாநகரசபையை வைத்துக்கொண்டு ஒரு தீ அணைப்புப் பிரிவை உருவாக்க முடியுமாக இருந்தால் ஒரு மாகாணசபையை வைத்துக்கொண்டு வடக்கில் மாவட்டத்திற்கு ஒரு தீ அணைப்புப் பிரிவை உறுவாக்கியிருக்க முடியும். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வகுப்பதற்கும், அதை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஆற்றலும் இல்லை, விருப்பமும் இல்லை என்பதைத்தான் இந்தச் சம்பவமும் உணர்த்தி நிற்கின்றது.

Related posts:

வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும்  அபிவிருத்தியின் எல்லையை எட்டவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவான...
அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் நலன்கருதி - இந்தியாவில் இருந்து மண்ணெண்ணெய் கொண்டுவரும் நடவடிக...

நலிவுற்ற மக்களது வாழ்வியலையும் மேம்படுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா- ஊரெழு மக்கள் சுட்டிக்காட்டு!
பழிவாங்கும் மனோநிலையில் இருந்து வெளியே வாருங்கள்: காங்கேசன்துறை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!
இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்குவதே அரசின் நோக்கம் - கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவை...