கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தி ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – கட்சித் தோழர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, May 18th, 2019

எமது கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரது செயற்பாடுகளும் கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து இயக்கங்களின் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு  ஒருநிமிட அஞ்சலி மரியாதை செலுத்தியதை தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் –

நாம் பதவிகளுக்காக வெறுமனே வேதமோதும் சாத்தான்கள் கிடையாது. மக்களது தேவைகளையும் அவர்களது அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் பொறிமுறைகளும் எம்மிடம் உள்ளது. ஆனாலும் அதை நிறைவுசெய்து கொடுப்பதற்கான அரசியல் அதிகாரம் எம்மிடம் போதாமல் இருப்பதே அதை முழுமையாக செயற்படுத்தி சாதித்துக்காட்ட முடியாதுள்ளது.

முயற்சிகள் என்பது ஒவ்வொரு வெற்றியினதும் படிக்கற்களாகவே இருந்துள்ளதாக வரலாறுகள் சொல்கின்றன. அந்தவகையில் நாம் எமது மக்களின் அபிலாஷைகளை வெற்றிகொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வதில் இடையூறுகள் வரலாம் ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி நாம் சாதித்துக் காட்டியவர்கள்.

நாம் எமது செயற்பாடுகளை கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் தோறும் வட்டார ரீதியாக கட்டமைத்து முன்னெடுத்து வந்திருக்கின்றோம். இந்த நிர்வாக கட்டமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு எமது கட்சியின் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வென்றெடுக்கும் வகையில் கட்சித் தோழர்களும் முக்கியஸ்தர்களும் அர்ப்பணிப்புடனும் உழைக்க வேண்டியது அவசியமானது.

எனவே செயற்பாடுகளை நம்பிக்கையுடன் நாம் மேலும் வலுப்படுத்தி மக்கள் மத்தியில் எமது கருத்துக்களையும் மக்களுக்கான எமது பணிகளையும் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது.  அந்தவகையில் நாம் புதிய வேகத்துடனும் நம்பிக்கையுடனும் எமது கட்சியின் கொள்கை மற்றும் இலட்சியக்கனவை ஈடேற்றும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியது அவசியமானது என மேலும் தெரிவித்தார்.

Related posts:


தண்ணீர் பவுஸர்களுக்கும், பால் பௌஸர்களுக்கும்  இறக்குமதி வரிச்சலுகை கொடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் ...
கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்றங்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
கடற்றொழிலாளர்களின் நலன்களுக்கு முரணாக எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பமாட்டாது – அமைச்சர் டக்ளஸ்...