வாய்ப்புக்களை பயன்படுத்தியிருந்தால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருப்போம்: அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!
Saturday, July 4th, 2020வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தியிருந்தால் தற்போது நடைமுறை ரீதியாக சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருக்க முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
யாழ்ப்பாணம், வறணியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும், இலங்கை – இந்திய ஒப்பந்தததின் ஊடாக கிடைத்த மாகாணசபை அதிகாரங்கள் என்பது பொன்னான வாய்ப்பு என்று தெரித்த அமைச்சர், அது தவறானவர்களின் கைகளில் சென்றடைந்தமையினால் சரியாக கையாளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
அந்த வாய்ப்பு சரியாக கையாளப்பட்டிருக்குமானால், கடந்த முப்பது வருடத்தில் அதில் காணப்பட்ட குறைபாடுகளை நடைமுறை ரீதியாக களைந்து சுயநிர்ணய உரிமையை பெற்றிருக்க முடியும். ஆனால் மாகாண சபையை ஆரம்பத்தில் பொறுப்பேற்றவர்கள் கும்மாளமடித்து அனைத்தையும் குழப்பி விட்டனர்.
பின்னர் அதிகாரத்தை பெற்றவர்கள் உசுப்பேற்றும் அரசியலில் செய்தும் ஊழல் புரிந்தார்களே தவிர எதையும் ஆக்கபூர்வமாக செய்யவில்லை எனவும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து
தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுபவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால தவறுகளை உணர்ந்து மக்கள் சரியான தீர்மானங்களை மேற்கொள்வார்களாயின், இன்னும் சில வருடங்களில் தமிழ் மக்கள் விரும்புகின்ற வாழ்வியல் மாற்றங்களை தன்னால் உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
Related posts:
|
|