எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் – பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3070 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
Tuesday, December 12th, 2023எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் காரணமாக கொழும்பு, களுத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நேரடி கடற்றொழிலாளர்கள் 15,032 பேரும், மறைமுக கடற்றொழிலாளர்கள் 4,891 பேருமாக மொத்தம் 19,923 பேர் தொழில் தடையினால் பாதிக்கப்பட்டதாக இனங்காணப்பட்டனர்.
எமது அமைச்சு பிரசுரித்திருந்த பத்திரிகை விளம்பரங்கள் மூலமாகவும், கிராமிய, பிரதேச மற்றும் மாவட்ட குழுக்கள் மூலமாகவும் இவர்கள் இனங்காணப்பட்டனர். இந்த இழப்பீடு பெறுவதற்கு தகுதியுடைய எவருக்கும் இழப்பீடுகள் இதுவரையில் கிடைக்காதிருப்பின், அது தொடர்பில் அவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
அதன்படி, இதுவரையில் முதலாவது கட்டமாக – 420,000,000 ரூபாவும், 2 வது கட்டமாக, 354,544,105.70 ரூபாவும், 3வது கட்டமாக, 911,526,476.89 ரூபாவும், 4வது கட்டமாக 1,604,279,391.37 ரூபாவும் என மொத்தமாக சுமார் 3070 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குவதற்கென கிடைத்து, அவை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நான்கு கட்டங்களில் வழங்கப்பட்டுள்ளன.
இத் தொகையானது மேற்படி கப்பலின் காப்புறுதி நிறுவனம் வழங்கிய இடைக்கால இழப்பீட்டுத் தொகையாகும். எமது கோரிக்கை மேலும் இழப்பீடுகள் பெறுவதற்கென முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவை இப்போது கிடைத்திருப்பதைவிட பல மடங்காகலாம்.
மேலும் மேற்படி கப்பல் அனர்த்தம் காரணமாகப் கடற்றொழிலாளர்களின் பாதிக்கப்பட்ட வலைகளுக்கு பதிலாக 6.5 மில்லியன் ரூபாவுக்கு புதிய வலைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி இழப்பீடானது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் காரணமாக கடற்றொழில் தடைவிதிக்கப்பட்டிருந்த பகுதிகளின் கடற்றொழிலார்கள், கடற்றொழில் சார்ந்த மறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் அது சார்ந்த ஏனைய துறையினருக்கே வழங்கப்பட்டுள்ளதை நான் மீண்டும் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
இந்த நிலையில் மேற்படி கப்பல் அனர்த்தம் காரணமாக நிறுவகங்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிப்புகள் இனங்காணப்பட்ட பகுதிகளைத் தாண்டி வேறும் பகுதிகள் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளதாக சில அரசியல் தரப்பினர் கூறி வருகின்றனர். இது தொடர்பில் நிறுவகங்களைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவதற்கும் நான் உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான சபை வாத – விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறி்ப்பிடத்தக்கது
000
Related posts:
|
|