ஊர்காவற்துறை – காரைநகர் போக்குவரத்து தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அவதானம் – விரைவில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை.!

Thursday, November 26th, 2020

ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற மிதக்கும் பாதையை பழுதுபார்க்கும் பணிகள் தற்பொழுது  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த இரண்டு பிரதேசங்களுக்கும் இடையிலான போக்குவரத்து அண்மைய சில நாட்களாக தடைப்பட்டிருக்கின்றமை தொடர்பாக பிரதேச மக்களினால் ஊர்காவற்றுறை பிரதேச சபை தலைவர் ஜெயகாந்தன் மற்றும் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் வீ.ரஜனி ஆகியோரின் கவனத்திற்கு  கொண்டு வரப்பட்டிருந்தது

குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே.ஜெகன், குறித்த போக்குவரத்து தடைப்பட்டமைக்கான காரணங்களை கேட்டறிந்ததுடன் அதனை சீர்செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

இந்நிலையில், குறித்த மிதக்கும் பாதையின் இயந்திரத்தினை சீர்செய்வதற்கு தேவையான உபகரண பாகங்களை கொழும்பில் இருந்து எடுத்து வரப்பட்டு திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் சில தினங்களில் குறித்த பாதை மூலம் பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீவகங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள தலைவர்  டக்ளஸ் தேவானந்தா, பயணிகள் போக்குவரத்து படகு சேவைகள் அனைத்தையும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவத்தின் கீழ் செழுமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் கடற்றொழில் அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்  முயற்சியினால் ஊர்காவற்துறை – காரைநகர் இடையில் 500 மீற்றர் நீளமான பாலம் அமைப்பதற்கு சுமார் 1700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Related posts:


காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதனூடாக வடக்கில் தொழிவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் ...
ஜனாதிபதி தலைமையில் குறுகிய காலத்தில் நாடு அனைத்துத் துறைகளிலும்; முன்னேற்றம்காணும் - அமைச்சர் டக்ளஸ்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவ...