அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு – நிறைவுக்கு வந்தது கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!
Friday, March 22nd, 2024யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் அருகாமையில் கடந்த நான்கு நாள்களாக கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துவந்த சாகும்வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து முடிவுக்கு வந்துள்ளது.
குறித்த போராட்ட களத்திற்கு இன்று மதியம் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராட்டகாரர்களை நேரடியாக சந்தித்து உரையாடியதுடன் தான் இந்தியத் தரப்போடு குறிப்பாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி அரசுகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் விரைவில் சம்மந்தப்பட்ட தரப்புகளோடு நேரடியான பேச்சுவார்த்தை நடத்தப்படுமெனவும் தற்போது இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் ஆணையாளரது அனுமதியும் குறித்த சந்திப்புக்கு தேவையாக உள்ளதால் அந்த அனுமதி கிடைத்ததும் பேச்சுக்கள் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்திருந்ததுடன் அதுவரை சற்று பொறுமையாக இருக்குமாறும் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையிலேயே போராட்டத் முடிவுக்கு வந்துள்ளது.
முன்பதாக வடக்கு கடற்பரப்புகளில் எல்லைதாண்டி அத்துமீறி நுழைந்து இழுவைமடி வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழிக்கும் இந்திய மீன்பிடியாளர்களை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு அருகாமையில் யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலைமுதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்..
குறிப்பாக மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா மற்றும் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு மீனவர்களே உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்..
குறித்த மீனவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக அத்துமீறிவரும் இந்திய படுகுகளை தடுத்து நிறுத்தும் நிரந்தரமான முடிவை வலியுறுத்தி தொடர்ச்சியாக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திவந்த நிலையிலேயே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
முன்பதாக நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருப்போரில் நான்கு பேரின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியதைத் தொடர்ந்து அவர்களை விஷேட வைத்தியர்கள் பரிசோதித்து அறிவுரை வழங்கிய நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று போராட்ட களத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை விளக்கியதுடன் யாழ். கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைமுடிவுக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
0000
Related posts:
|
|